வெ.இண்டீஸ் வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே கிரிக்கெட் ஆட சம்மதம் தெரிவித்து முதல் அணியாக வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் அந்த அணி வீரர்கள் பங்கேற்றனர்.
தொடர் சுற்றுப்பயணம்
அதன் பின் ஐபிஎல் தொடரிலும், நியூசிலாந்து கிரிக்கெட் தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்றது. கொரோனா வைரஸ் பாதிப்பு பரவிய பின் அதிகமாக வெளிநாடுகளில் ஆடிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் தான். அடுத்ததாக வங்கதேச நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
மறுப்பு
இந்த நிலையில், அந்த அணியில் முக்கிய வீரர்கள் 12 பேர் வங்கதேசத்துக்கு செல்ல மறுப்பு தெரிவித்து அந்த தொடரில் இருந்து விலகி உள்ளனர். டெஸ்ட் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டரும், ஒருநாள் அணி கேப்டன் கீரான் பொல்லார்டும் இதில் அடக்கம்.
என்ன காரணம்?
கொரோனா வைரஸ் அச்சம் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. வங்கதேச நாட்டில் சரியான முன்னெச்சரிக்கை வசதிகள் இருக்காது என அவர்கள் நினைத்து இருக்கக் கூடும் என்கிறார்கள். அது மட்டுமின்றி தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் துவங்கி இருப்பதாலும் அவர்கள் இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.
வங்கதேசம் அணி நிலை
வங்கதேச அணி கொரோனா வைரஸ் பாதிப்பால் நிதி நிலைமை மோசமடைந்து தடுமாறி வருகிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே அங்கே துவங்கி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இரண்டாம் நிலை அணியையே அனுப்பி வைக்க உள்ளது.