36 ஆண்டுகளுக்கு முன்பு
இதே நாளில் 36 ஆண்டுகளுக்கு முன்பு கபில்தேவ் தலைமயிலான இந்திய அணி 2 முறை உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 1983ம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது. அந்த வெற்றி பெரும் கொண்டாட்டமாக மாறியது.
இந்தியா சிறிய அணி
அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதாவது, 1975 மற்றும் 1979ம் ஆண்டுகளில் 2 உலக கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால், சிறிய அணியான இந்தியாவிடம் தனது சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தது.
8 அணிகள் பங்கேற்பு
1983ம் ஆண்டு புரூடென்ஷியல் உலக கோப்பை போட்டி ஜூன் 9 முதல் 25ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்த தொடரில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன.(அப்போது தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், கென்யா, வங்கசேதம் ஆகிய அணிகள் கிடையாது)
ஆச்சரிய முடிவுகள்
இரட்டை ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் முறையில் அந்த தொடர் நடைபெற்றது. மொத்தம் 27 ஆட்டங்கள், இன்றும் மறக்க முடியாத போட்டிகள். 1983ம் ஆண்டு உலக கோப்பை தொடரானது, யாரும் எதிர்பார்க்காத வகையில் பல ஆச்சர்ய முடிவுகளை கிரிக்கெட் உலகுக்கு தந்திருக்கிறது. அன்றைய கால கட்டத்தில் ஒரு இன்னிங்சில் இப்போது போல 50 ஓவர்கள் கிடையாது... 60 ஓவர்கள்.
இரு பிரிவுகள்
15 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்றன. 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றன. பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இருந்தன.
இந்திய போட்டிகள்
இந்தியா தனது லீக் ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸை 34 ரன்கள் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயை 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. மேலும் மற்றொரு ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 31 ரன்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 118 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது.
செமி பைனலில் இந்தியா
இதனையடுத்து அரையிறுதி சுற்றுகள் நடைபெற்றன. ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தானும், பி பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீசும் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் காலி செய்தது வெஸ்ட் இண்டீஸ்.
1983, ஜூன் 25ம் தேதி
1983ம் ஆண்டு... ஜூன் 25... இதே நாளில்.. கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே பைனல். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவை பேட் செய்ய சொன்னது. அப்போது உலகிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சைக் கொண்டிருந்த அணி வெஸ்ட் இண்டீஸ்.
அசத்திய பவுலிங்
முதலில் களம் இறங்கிய இந்திய அணியில் ஸ்ரீகாந்த் 38, அமர்நாத் 26 ரன்களை சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆன்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மார்ஷல், ஹோல்டிங் இந்தியாவை பந்துவீச்சில் நிலைகுலைய வைத்தனர்.
இந்தியா 183
60 ஓவர்கள் கொண்ட அந்த போட்டியில் 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா. எளிதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் நினைத்திருந்த நேரத்தில் இந்திய பவுலர்கள் மிக திறமையாக பந்து வீசினர்.
இந்தியா சாம்பியன்
அதனால் வெஸ்ட் இண்டீஸ் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா முதல் முறையாக உலக சாம்பியன் ஆனது. அந்த உலக கோப்பையை கையில் ஏந்தி முத்தமிட்டார் கேப்டன் கபில் தேவ். அந்த காட்சியை உலக கிரிக்கெட் அணியின் எந்த ரசிகர்களாக இருந்தாலும் ரசிக்காமல் இருக்கமாட்டார்கள். அந்த ஒரு புகைப்படம் இன்றும் ஏக பிரசித்தம்.
பட்டியலில் இல்லை
1983ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் வெல்லப்போகும் அணி எது என்ற யூகங்களின் போது இந்தியா பட்டியலில் இல்லை என்று கூறலாம். ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் இன்றைய நிலைமையோ வேறு.
மீண்டும் சாம்பியனாகுமா?
1983ம் ஆண்டை போன்று இந்த உலக கோப்பையின் இறுதி ஆட்டமும் லார்ட்ஸ் மைதானத்தில்தான் நடைபெற இருக்கிறது. 1983, 2011 ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை உலக கோப்பையை இந்திய அணியே கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்திய அணி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.