கபில் தலைமையிலான வெற்றி
கடந்த 1983ல் ஆல் ரவுண்டர் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் உலக கோப்பை வெற்றியை சாத்தியப்படுத்தியது. முதலில் விளையாடிய இந்திய அணி 183 ரன்களிலேயே சுருண்ட போதிலும், இரண்டாவதாக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளை 43 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்டி இந்தியாவிற்கு வெற்றியை பெற்று தந்தது இந்திய அணி.
அதிகபட்ச ரன் எடுத்த ஸ்ரீகாந்த்
இந்த வெற்றிக்கு பிறகே, சந்து பொந்துகளில் எல்லாம் கிரிக்கெட் பிரபலமானது. அனைவருக்கும் கிரிக்கெட்டர் ஆகும் கனவும் அதிகரித்தது. கடந்த 1983 ஜூன் 25ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பௌலிங்கை தேர்ந்தெடுத்தது. இந்தியாவை சொற்ப ரன்களில் சுருட்டியது. அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் 38 ரன்களை எடுத்த நிலையில், எந்த வீரரும் 30ஐ தாண்டவில்லை.
33 ரன்களில் அவுட்டான ரிச்சர்ட்ஸ்
வெற்றி முனைப்புடன் இரண்டாவதாக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த அணியின் முக்கிய வீரரான விவியன் ரிச்சர்ட்சை 33 ரன்களில் மதன் லால் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். இதையடுத்து அந்த அணி 140 ரன்களில் சுருண்டது. இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது.
வீரர்கள் வாழ்த்து
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் பால்கனியில் கோப்பையுடன் கபில்தேவ் தோன்றிய அந்த காட்சி இன்றுவரை அனைவருக்கும் பிடித்தமானதாக உள்ளது. இந்த போட்டியில் 26 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய மொஹிந்தர் அமர்நாத்துக்கு மேன் ஆப் த மேட்ச் விருது கிடைத்தது. இந்நிலையில் இந்த வெற்றியின் 37வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி இந்திய வீரர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். சுரேஷ் ரெய்னா, முகமது கையிப், ஹர்பஜன் சிங் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.