ஆட்ட நாயகன் விருது
கடந்த 1983ல் லார்ட்சில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் 37வது ஆண்டு நினைவை இந்தியா இன்று கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அந்த போட்டியின் ஆட்ட நாயகன் மொஹிந்தர் அமர்நாத் தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
ஆட்டநாயகன் அமர்நாத்
அதே தொடரின் அரையிறுதி ஜூன் 22ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற்ற நிலையில், இந்திய அணி தொடரை நடத்திய இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. அதிலும் 46 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மேன் ஆப் தி மேட்ச் விருதினை அமர்நாத் பெற்றிருந்தார். அந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
தன்னம்பிக்கையை பலப்படுத்தியது
இதனிடையே, இந்தியாவின் இந்த முதல் உலக கோப்பை வெற்றி அணியின் தன்னம்பிக்கையை பலப்படுத்தியதாக ஆட்ட நாயகன் மொஹிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார். 69 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 85 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அமர்நாத், சர்வதேச அளவில் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த வெற்றி இந்திய அணிக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
கூட்டாக சாதனை
தற்போதைய அணியில் காணப்படும் அனைத்து மாற்றங்களுக்கும் வித்தாக உலக கோப்பை 1983 வெற்றி அமைந்ததாகவும் அமர்நாத் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வெற்றி அணி கூட்டாக விளையாடி சாதித்ததாகும் என்றும், ஒவ்வொருவரும் தங்களது பணியை சிறப்பாக செய்தனர் என்றும் அது கூட்டாக வெற்றியை தேடித் தந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.