மீண்டும் துவங்கிய சர்வதேச போட்டி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 117 நாட்களாக முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், பல்வேறு விதிமுறைகளுடன் மீண்டும் இங்கிலாந்தின் சௌதாம்ப்டனில் நேற்று துவங்கியுள்ளது. இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மழை குறுக்கீடு காரணமாக போட்டி 3 மணிநேரங்கள் தாமதமாக துவங்கியது.
ஹோம் அம்பயர்கள் நியமனம்
இதையடுத்து இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.பயோ செக்யூர் முறையில், காலி மைதானத்தில் நடத்தப்பட்ட இந்த முதல் நாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தினமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கடந்த 2002 முதல் ஹோம் அம்பயர்கள் பயன்படுத்தப்படாத நிலையில், இந்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 3 அம்பயர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் 17.4 ஓவர்கள்
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் துவங்கிய இந்த போட்டியில் மழை குறுக்கிட்டு, வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் சோதித்தது. இதையடுத்து தாமதமாக துவங்கிய இந்த போட்டியில் மழை மற்றும் மோசமான லைட்டிங் காரணமாக மொத்தமாக 17.4 ஓவர்கள் மட்டுமே போடப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை எடுத்திருந்தது.
அவுட் ஆன டாம் சிப்ளே
மேற்கிந்திய தீவுகளின் ஷனான் கேப்ரியல் பந்துவீச்சில், துவக்க ஆட்டக்காரர் டாம் சிப்ளே ஆட்டமிழந்தார். முன்னதாக முந்தைய ஓவரில், ரோரி பர்ன்ஸ் இதேபோல ஆட்டமிழக்க இருந்து, தப்பித்தது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் ஆட்ட முடிவில் ரோரி பர்ன்ஸ் 20 ரன்களும் ஜோ டென்லி 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேற்கிந்திய தீவுகளின் நிதானமான பௌலிங்
117 நாட்களுக்கு பிறகு துவங்கியுள்ள இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் இந்த முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக சொதப்பிய நிலையில், 17.4 ஓவர்களுடன் முடிந்தது. எதிரணி பௌலர் கெமர் ரோச், 6 ஓவர்கள் போட்டு 2 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணி பௌலர்கள் நிதானமாக பௌலிங் போட்டனர்.