ஒருநாள் போட்டி தொடர்
வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் இன்றும், 2வது ஆட்டம் மே 25ம் தேதியும், 3வது ஆட்டம் மே 28ம் தேதியும் நடக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக 3 ஆட்டங்களும் மிர்பூர் தேசிய அரங்கில் மட்டுமே நடக்கும். இந்த போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கொரோனா
இந்நிலையில் இலங்கை வீரர்களுக்கு நேற்று இரவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பந்துவீச்சு பயிற்சியாளர் சமிந்தா வாஸ் மற்றும் வீரர்கள் இசுரு உதான, ஷிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அணியின் மற்ற வீரர்களுக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகம் நிலவியது.
முதல் ஒருநாள் போட்டி
அணியில் 3 பேருக்கு கொரோனா உறுதியான போதும் திட்டமிட்டபடி இலங்கை - வங்கதேசத்திற்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. ஆனால் அணி வீரர்கள் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பி அனுப்பி வைக்க வேண்டும் என புலம்பி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அணியின் மருத்துவக்குழுக்கு கடும் அதிருப்தி இருப்பதாக தெரிகிறது.
மருத்துவக்குழு அதிருப்தி
இந்த போட்டி தொடருக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் சார்பில் சரியான பபுள் ஏற்பாடு செய்யவில்லை என்றும், பல இடங்களில் பபுள் உடைய வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மருத்துவக்குழு கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை இலங்கை அணியில் பாதிப்பு அதிகரித்தால், அடுத்த மாதம் அந்த அணி மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் தடைபட வாய்ப்புள்ளது.