இந்திய அணி
இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவுக்கு சென்ற இந்திய வீரர்கள், அங்கு தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் டிராவிட் ஆசிய கோப்பை தொடருக்கான பணிகளில் இருப்பதால், இந்த தொடருக்கு வி.வி.எஸ். லக்ஷ்மண் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
ஸ்பெஷல் ட்ரெய்னிங்
இந்நிலையில், இரண்டு வீரர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் தீபக் சஹார் ஆகிய இருவரும் தான் அது. இருவரும் தாமதமாக ஹராரேவுக்கு சென்ற சூழலில் தினமும் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட, இவர்கள் இருவருமே அதிக நேரம் வலைபயிற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்
கே.எல்.ராகுல் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் காயத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்தனர். எனினும் இவர்களின் பெயர்கள் ஆசிய கோப்பைக்கு சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த தொடரின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தால், இருவருமே அதி தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
இக்கட்டான நிலை
கே.எல்.ராகுல் ஒருவேளை ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடி தனது உடற்தகுதியை நிரூபிக்காவிட்டால், ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. அவரின் இடத்தை நிரப்புவதற்காக முழு உடற்தகுதியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் காத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.