போராட்டம்
இதற்கிடையே 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை அணியை வழிநடத்திச் சென்ற குமார் சங்ககாராவை இலங்கை அரசு மற்றும் காவல்துறை அவமானப்படுத்துவதாகக் கூறி ஒரு இளைஞர் அமைப்பு அந்த அலுவலத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டது.
குற்றவாளி போல..
இலங்கையின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான குமார் சங்ககாராவை குற்றவாளி போல நீண்ட நேரம் விசாரணை செய்தது இந்த மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. முதலில் வீரர்களுக்கு சம்பந்தமே இல்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் வீரர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடந்து வருகிறது.
சர்ச்சை துவக்கம்
இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அளித்த பேட்டி ஒன்று தான் 2011 உலகக்கோப்பை மேட்ச் பிக்ஸிங் குறித்த சர்ச்சை துவங்க முக்கிய காரணம். அவர் இலங்கை அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியை விற்று விட்டதாக கூறி இருந்தார்.
அணி மாற்றம்
மேலும், சில அதிகாரிகள் கார் கம்பெனிகளை வாங்கினார்கள் என்றும், கடைசி நேரத்தில் நான்கு வீரர்கள் இலங்கை கிரிக்கெட் போர்டுக்கு தெரியாமல் மாற்றப்பட்டனர் எனவும் கூறி அதிர வைத்தார் மஹிந்தானந்த அலுத்கமகே.
விசாரணை நடத்த உத்தரவு
இந்த நிலையில் இலங்கை அரசு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதை அடுத்து சுமார் 9 ஆண்டுகள் கழித்து 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
உபுல் தரங்கா
மஹிந்தானந்த அலுத்கமகே, முன்னாள் தேர்வுக் குழு தலைவர் அரவிந்தா டி சில்வா ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து இறுதிப் போட்டியில் ஆடிய துவக்க வீரர் உபுல் தரங்காவிடமும் விசாரணை நடைபெற்றது. உபுல் தரங்கா இரண்டு மணி நேரம் காவல்துறையின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
10 மணி நேரம் கடும் விசாரணை
அவரைத் தொடர்ந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் கேப்டனாக செயல்பட்ட குமார் சங்ககாராவிடம் விசாரணை நடைபெற்றது. அவரிடம் சுமார் 10 மணி நேரம் காவல்துறை கடும் விசாரணை நடத்தி உள்ளனர்.
நீண்ட விசாரணை
முதலில் இந்த மேட்ச் பிக்ஸிங்கில் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கூறப்பட்டு வந்த நிலையில், இரண்டு கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடந்துள்ளது. அதிலும் முன்னாள் கேப்டன் சங்ககாராவிடம் நடந்த நீண்ட விசாரணை பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.