2011 உலகக்கோப்பை
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் தோற்றது. அந்தப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் செய்து இலங்கை அணி தோற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றச்சாட்டை முன் வைத்தார்.
ஆதாரம் கேட்ட வீரர்கள்
அவரது புகாரால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தப் போட்டியில் ஆடிய முன்னணி வீரர்களான குமார் சங்ககாரா மற்றும் மகிளா ஜெயவர்தனே அவரிடம் ஆதாரம் கேட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதற்கும் பதில் சொன்னார் மஹிந்தானந்த அலுத்கமகே.
சில அதிகாரிகள்
வீரர்கள் யாரையும் தான் சொல்லவில்லை என்றும், சில அதிகாரிகள் அதே ஆண்டில் வியாபாரங்களில் முதலீடு செய்ததையும், கார் கம்பெனியை விலைக்கு வாங்கியதையும் சுட்டிக் காட்டினார். மேலும், இறுதிப் போட்டியில் நான்கு வீரர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதை சுட்டிக் காட்டினார்.
சிறப்பு புலனாய்வுக்குழு
இதை அடுத்து இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு இது குறித்து விசாரணை துவங்கியது. முதலில் குற்றச்சாட்டை முன் வைத்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிடம் விசாரணை நடைபெற்றது.
கடும் விசாரணை
அவரைத் தொடர்ந்து 2011 உலகக்கோப்பை தொடர் நடந்த போது தேர்வுக் குழு தலைவராக இருந்த அரவிந்தா டி சில்வாவிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடந்தது. அவரைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் நிதான ஆட்டம் ஆடிய உபுல் தரங்காவிடம் விசாரணை நடந்தது.
பத்து மணி நேர விசாரணை
அதன் பின் ஜாம்பவான் வீரர்களும், முன்னாள் கேப்டன்களுமான குமார் சங்ககாரா மற்றும் மகிளா ஜெயவர்தனேவிடம் விசாரணை நடைபெற்றது. குமார் சங்ககாராவிடம் பத்து மணி நேரம் நடந்த விசாரணையால் பரபரப்பு எழுந்தது. இளைஞர் அமைப்பு ஒன்று போராட்டத்தில் குதித்தது.
ஆதாரம் இல்லை
இலங்கைக்கு பெருமை தேடித் தந்த கிரிக்கெட் வீரர்களை அவமானப்படுத்துவதாக குரல்கள் எழுந்தன. இந்த நிலையில், விசாரணையை அதிரடியாக முடித்துக் கொண்டுள்ளது சிறப்பு புலனாய்வுக் குழு. மேட்ச் பிக்ஸிங் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் இந்த விசாரணை முடித்துக் கொள்ளப்பட்டது.
நிரூபிக்க முடியவில்லை
அந்த இறுதிப் போட்டியில் ஆடிய மூன்று வீரர்களிடமும் பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லாததால் இந்த விசாரணையை முடித்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மஹிந்தானந்த அலுத்கமகே கூறிய 14 குற்றச்சாட்டுகளில் எதையும் நிரூபிக்க முடியவில்லை எனவும் கூறி இருக்கிறது சிறப்பு புலனாய்வு குழு.
முடிவுக்கு வந்துள்ளது
இதை அடுத்து இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய உலகக்கோப்பை இறுதிப் போட்டி மேட்ச் பிக்ஸிங் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. நாட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த விசாரணை பாதியில் நிறுத்திக் கொள்ளப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.