கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 300 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது. அதே போல, இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கானவர்களை பாதித்துள்ளது.
அலெக்ஸ் ஹேல்ஸ் பாதிப்பு
இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் பங்கேற்றார். கொரோனா அச்சம் மற்றும் அதனால் இங்கிலாந்து நாட்டில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மனதில் கொண்டு அந்த தொடரின் பாதியில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் நாட்டுக்கு கிளம்பினர்.
அறிகுறிகள்
அவர்களில் அலெக்ஸ் ஹேல்ஸ்-க்கு ஒரீரு நாட்களில் கொரோனா வைரஸ்-க்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. எனினும், பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. எனினும், அவருக்கு அனைத்து அறிகுறிகளும் இருப்பதால் அவரை தனிமைப் படுத்தி வைத்துள்ளனர்.
தொடர் நிறுத்தம்
இந்த தகவல் பாகிஸ்தான் சூப்பர் லீக் நிர்வாகத்திற்கு சென்றதால் அவர்கள் பதறி அடித்து அந்த டி20 தொடரை அரையிறுதி சுற்றுக்கு முன் நிறுத்தினர். பின் அந்த தொடருடன் தொடர்புடைய 128 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் தொற்று இல்லை என தெரிந்தது.
பிறந்தநாள் பார்ட்டி
அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து வந்த பின், சக இங்கிலாந்து வீரர் டாம் கர்ரன்-இன் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார். அவர்களுடன் சர்ரே அணி வீரர் ஜேட் டேர்ன்பேக்கும் கலந்து கொண்டார். இந்த தகவல் பின்னர் தெரிய வந்துள்ளது.
மூவருக்கும் சிக்கல்
அலெக்ஸ் ஹேல்ஸ்-க்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இரண்டு வீரர்களையும் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனால், இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் லேசான பதற்றம் நிலவி வருகிறது.
இங்கிலாந்து கவுன்டி அணிகள்
இதுவரை சர்ரே அணியில் ஆறு வீரர்கள் கொரோனா அறிகுறிகளால் தனிமையில் உள்ளனர். அதே போல, வோர்செஸ்டர்ஷயர் அணியில் சிலருக்கும் அறிகுறிகள் இருப்பதால் மொத்த அணியையும் வெளியே வராதவாறு பார்த்துக் கொண்டுள்ளது அணி நிர்வாகம்.
செய்யக் கூடாது
கொரோனா வைரஸ் கூட்டமாக, நெருக்கமாக இருக்கும் போது வேகமாக பரவும் என கூறப்படும் நிலையில், பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என கூறப்படுகிறது. ஆனால், அதை மீறி பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய மூன்று இங்கிலாந்து வீரர்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர். மக்கள் இப்போதாவது இந்த நோயின் தாக்கத்தை உணர்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.