தேர்வு பணிகள்
இதனையடுத்து இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஓய்வில் இருக்கும் பும்ரா, ரோகித் சர்மா, பண்ட், ஷமி போன்றோர் இந்த சுற்றுப்பயணத்திற்கு திரும்புகின்றனர். இதனால் அணித்தேர்வின் போது யாரை நீக்குவது என்ற குழப்பத்தில் பிசிசிஐ தாமதித்து வருகிறது.
முக்கிய வீரர்கள் இல்லை
இந்நிலையில் இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் ரவீந்திர ஜடேஜா, ஓப்பனிங் வீரர் சுப்மன் கில், அக்ஷர் படேல் மற்றும் இஷாந்த சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என தெரியவந்துள்ளது. காயத்தால் பாதிக்கப்பட்ட அவர்கள் 4 பேருக்கும் உடற்தகுதி சரியாக இல்லாததால் அவரை புறக்கணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சீனியர் வீரர்
கடந்த நியூசிலாந்து டெஸ்டின் போது ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜாவுக்கு காலில் தசை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்தால் குணமடைய குறைந்தது 3 மாதங்களுக்கு மேல் ஆகும் எனத்தெரிகிறது. இதே போல அக்ஷர் படேலுக்கு லேசான எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு இவர்கள் உடற்தகுயுடன் இல்லை.
மாற்று ஸ்பின்னர்கள்
தென்னாப்பிரிக்க நாட்டின் களங்களில் வேகப்பந்துவீச்சு தான் அதிகம் எடுபடும். அங்கு ஒரே ஒரு ஸ்பின்னர் தான் அணியில் தேவைப்படுவார். எனவே அந்த இடத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் நிரப்பவுள்ளார். அவருக்கு மாற்று வீரர்களாக இந்திய ஏ அணியில் இருக்கும் சபாஷ் நதீம் அல்லது சௌரப் குமார் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்படலாம்.
சுப்மன்
பேட்டிங்கில் இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு கடந்த சில மாதங்களாகவே தசைப்பிடிப்பு பிரச்னை இருந்து வருகிறது. அதோடு சேர்ந்து நியூசிலாந்து டெஸ்டில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஓப்பனிங்கிற்கு கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா முதன்மை தேர்வாக இருப்பார்கள். மயங்க் அகர்வால் மாற்றுவீரராக அழைத்துச் செல்லப்படலாம்.
முகமது சிராஜ்
இதே போல வேகப்பந்துவீச்சில் இஷாந்த் சர்மா காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான களத்தில் இஷாந்த் இல்லாதது பிரச்னையாக இருந்தாலும், அவரின் இடத்தை நிரப்ப முகமது சிராஜ் தயாராகி விட்டார். இதனால் அவர் இடம்பெறலாம் எனத்தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.