4 நாட்களாக குறைக்கும் முடிவு
சர்வதேச டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்களில் நடத்தப்பட்டு வருகின்றன. மற்ற போட்டிகளை போலல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதன் முழு உற்சாகத்தை வழங்கிவரும் இந்த போட்டிகளில் ரசிகர்களின் ஆர்வம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐசிசி, இதை 4 நாட்களில் சுருக்கும் தனது முடிவை கடந்த டிசம்பர் மாதத்தில் அறிவித்தது.
செலவு அதிகரித்துள்ளது
5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களின் வருகை குறைந்துள்ளதால், அதை நடத்துவதற்கு போதிய விளம்பரங்கள் கிடைப்பதில்லை என்றும், மழை குறுக்கீடு காரணமாகவோ அல்லது போட்டி சீக்கிரமாக முடிந்தாலே அதை ஈடுகட்டவும் அதிக செலவாவதாகவும் ஐசிசி தரப்பில் இந்த நாட்குறைப்பிற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் 4 நாட்கள்
ஐந்து நாட்களுக்கு நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களுக்கு குறைப்பதன்மூலம் சனிக்கிழமை துவங்கி செவ்வாய்க்கிழமை வரையோ, அல்லது வியாழக்கிழமை துவங்கி ஞாயிற்றுக்கிழமை வரையிலோ இந்தப் போட்டிகளை நடத்த முடியும் என்றும் இருதினங்கள் விடுமுறைகளாக வருவதால் ரசிகர்களை அதிகளவில் மைதானத்திற்கு வரவழைக்க முடியும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.
பிரபல வீரர்கள் கண்டனம்
ஐசிசியின் இந்த முடிவிற்கு இந்திய கேப்டன் விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரிய வடிவம் கெட்டுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கிளென் மெக்கிராத், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் போன்றோர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவும் ஆதரவு
ஐசிசியின் இந்த முடிவிற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவு மற்றும் கண்டங்கள் இருந்தபோதிலும் தன்னுடைய முடிவிலிருந்து ஐசிசி பின்வாங்குவதாக தெரியவில்லை.
ஐசிசி முடிவு
இந்த திட்டம் குறித்து வரும் மார்ச் மாத இறுதியில் துபாயில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அது தன்னுடைய பரிந்துரையை ஐசிசி நிர்வாக குழுவிற்கு அனுப்பும். நிர்வாக குழு இதுகுறித்து பரிசீலனை செய்து ஆளும் குழுவிற்கு பரிந்துரையை அனுப்பும். இதையடுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
18ல் 4 பேர் எதிர்ப்பு
துபாயில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ள நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள 18 பேர்களில் 4 பேர் தற்போதே இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகி டேவிட் ஒயிட் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மற்றவர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக கூற மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நிதி மற்றும் வணிக நெருக்கடிகள்
பாரம்பரியமாக நடத்தப்பட்டுவரும் டெஸ்ட் போட்டிகளின் நாட்களை 5லிருந்து 4ஆக குறைக்கும் தன்னுடைய திட்டத்திற்கு ஐசிசி நிதி மற்றும் வணிக காரணங்களையே முன்வைக்கிறது. மேலும் இந்த அவசர யுகத்தில் 5 நாட்கள் ரசிகர்களை ஒரே இடத்தில் விருப்பத்துடன் அமர வைப்பது மிகவும் கடினம் என்பதும் ஐசிசியின் வாதம்.
புள்ளி விவரங்கள் அறிவிப்பு
மேலும் 5 நாட்கள் நடத்தப்பட வேண்டிய டெஸ்ட் போட்டிகள் அதற்குள்ளாகவே முடிந்து விடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மேற்கொள்ளப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் 67 போட்டிகளில் 40 டெஸ்ட் போட்டிகள் 5 நாட்களுக்கு முன்னதாக முடிவுற்றதை தெரிவிக்கின்றன. இதன்மூலம் 60 சதவிகித போட்டிகள் பல்வேறு காரணங்களால் 5 நாட்களுக்கு முன்னதாக முடிவுற்றுள்ளன.
பிங்க் பால் போட்டிகள்
டெஸ்ட் கிரிக்கெட்டை வணிக நோக்கங்களுக்காக பகலிரவு போட்டிகளாக மாற்றம் செய்து ஐசிசி அறிவித்தது. இதற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியுள்ளதை சமீபத்தில் இந்தியா -வங்கதேசம் இடையில் நடத்தப்பட்ட பிங்க் பால் பகலிரவு போட்டிகள் அடையாளம் காட்டின. மேலும் இந்த போட்டியை 6 மணிநேரத்தில் முடிப்பது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐசிசி ஆலோசனை
எது எப்படி இருந்தபோதிலும் பல்வேறு சர்ச்சைகள், நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள போதிலும் நிதி மற்றும் வணிக காரணங்களை முன்வைத்து ஐசிசி தன்னுடைய முடிவில் உறுதியாக காணப்படுகிறது. மேலும் இதுகுறித்து அடுத்த மாதத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரிய வடிவம், மாற்றப்படுமா என்பது குறித்து ரசிகர்களுக்கு தெரியவரும்.