லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலாவது பேட்டிங் செய்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது போட்டியில் லாட்சில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆனால் 3 மற்றும் 4காவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி எதிரணியிடம் ஒட்டுமொத்தமாக சராணகதி அடைந்து தோற்றது.
இந்நிலையில் 5வது மற்றும் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ்டர் குக், தனது அணி முதலில் பவுலிங் செய்யும் என்று தெரிவித்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா, தோற்றாலோ அல்லது போட்டி டிரா ஆனாலோ டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றிவிடும். எனவே வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்திய அணி வெற்றி பெற்றால்தான் தொடரை சமன் செய்ய முடியும்.
இதனிடையே, காயத்தால் அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா மற்றும் ஸ்டூவர்ட் பின்னி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேநேரம் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், பந்து வீச்சில் சொதப்பிய பங்கஜ்சிங்கும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்: முரளி விஜய், கவுதம் கம்பீர், புஜாரா, கோஹ்லி, ரஹானே, டோணி, ஸ்டூவர்ட் பின்னி, அஸ்வின், புவனேஸ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, வருண் ஆரோன்.
இங்கிலாந்து அணி விவரம்: அலிஸ்டர் குக், ராப்சன், பல்லன்ஸ், இயன் பெல், ரூட், மொயின் அலி, பட்லர், வோகஸ், ஜோர்டன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.