நல்ல தொடக்கம்
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும்,அடிலெய்ட் ஸ்டரைகர்ஸ் அணியும் மோதின. பெர்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனையடுத்து களமிறங்கிய பெர்த் அணி வீராங்கனைகள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்தனர். பெத் மூனி 17 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்பாக விளையாடிய சோபி டிவைன் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகினார்.
கடைசி 5 ஓவர்
12 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து பெர்த் அணி தடுமாறியது. அப்போது மெர்சைனி கேப் பவுண்டரிகளை அவ்வப்போது விளாசி 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் கிங் 5 பந்துகளில் 3 பவுண்டரிகள் விளாசி 14 ரன்கள் சேர்க்க, பெர்த் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.கடைசி 5 ஓவரில் அந்த அணி 47 ரன்கள் சேர்த்தது.
அபார பந்துவீச்சு
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அடிலெய்ட் அணிக்கு ஆரம்பமே தடுமாற்றமாக அமைந்தது.பேட்டிங்கில் கலக்கிய கேப், பந்துவீச்சிலும் அவர் வீசிய முதல் 2 ஓவர்களில் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க,, டிவைன் ரன் ஏதும தராமல் விக்கெட் எடுத்தார். இதனால் பவர் பிளேவில் அடிலெய்ட் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சாம்பியன்
தடுமாறிய அடிலெய்ட் அணியை லாரா மற்றும் தஹிலா இணைந்து நிதானமாக விளையாடி அடுத்த 8 ஓவர்களில் 65 ரன்கள் சேர்த்து அணியை மீட்டனர். வெற்றி பெர்த் அணியை விட்டு கை நழுவிய நிலையில் வெறும் 6 பந்துகள் இடைவெளியில் இருவர் விக்கெட்டையும் பெர்த் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். 23 பந்துகளுக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் பென்னா 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தும் அடிலெய்ட் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர் முடிவில் அடிலெய்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் வெற்றிபெற்ற பெர்த் அணி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது. இந்த தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தொடர் நாயகி விருதை வென்றார்.