ஐபிஎல் தொடர்
முதலாம் குவலிபயர் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதன் பின்னர் நடைபெற்ற எலிமினெட்டர் போட்டியில் பெங்களூரு அணியை கேகேஆர் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து இன்று டெல்லி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே இரண்டாம் குவலிபயர் போட்டி நடைபெற்று வருகிறது. வரும் அக். 15ஆம் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டிகள் நடைபெறுகிறது. அது முடிந்த சில நாட்களிலேயே உலகக் கோப்பை டி20 தொடர் தொடங்குகிறது.
உலகக் கோப்பை
இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் அக். 24ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே கடந்த செப். 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், உலகக் கோப்பை டி20 அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் சிலர் ஐபிஎல் போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. அதேநேரம் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறாத பல இளம் வீரர்கள் அட்டகாசமான ஃபார்மை வெளிப்படுத்தினர். இதனால் இதற்கேற்ப இந்திய அணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். இந்தச் சூழலில் இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ இன்று அறிவித்திருந்தது.
8 வீரர்கள்
இந்தச் சூழலில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய 8 இந்திய வீரர்களை ஐக்கிய அமீரகத்தில் இருக்கச் சொல்லி இந்திய அணி அறிவுறுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பைக்குச் சிறப்பாகத் தயார் செய்ய இந்திய அணிக்கு இந்த வீரர்கள் உதவ உள்ளனர். இது குறித்து பிசிசிஐ இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், லுக்மான் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கரன் சர்மா, ஷாபாஸ் அகமது மற்றும் கே.கவுதம் ஆகிய வீரர்கள் துபாயில் இருக்கும் இந்திய அணியினருடன் சேர்ந்து கொள்வார்கள். டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராக அவர்கள் உதவுவார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
3 வேகபந்து வீச்சாளர்கள்
ஹர்ஷல் படேல் ஐபிஎல் தொடரில் 15 ஆட்டங்களில் விளையாடி 32 விக்கெட்களை சாய்த்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் பட்டியலில் அவர் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தாக டெல்லி அணியின் வேகப் பந்து வீச்சாளர் அவேஷ் கான் 23 விக்கெட்களுடன் 2ஆம் இடத்தில் உள்ளார். அதேபோல, காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக்கும் இந்திய அணிக்கு நெட் பவுலராக சேரவுள்ளார். தொடர்ந்து 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர்கள் இந்திய அணிக்குப் பெரிய அளவில் உதவுவார்கள்.
ஷர்துல் தாக்கூர் ஏன்
முன்னதாக அக்ஸர் படேலுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ இன்று அறிவித்திருந்தது. இந்திய அணியில் ராகுல் சாஹர், அஸ்வின், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதேநேரம் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய 3 வேக பந்து வீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியாவால் பந்து வீச முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்தச் சூழலில் இந்திய அணியின் வேகப்ந்து வீச்சை வலுப்படுத்தும் வகையில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.