அனைவராலும் விரும்பப்படும் தோனி
சிஎஸ்கே நாயகன் கேப்டன் கூல் தோனி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய கேப்டனாக எப்போதும் விளங்கி வருகிறார். எந்த சாதனைகளை மேற்கொண்டாலும் அவர் முகத்தில் அதை நாம் பார்த்துவிட முடியாது. வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு தன்னுடைய செயல்பாடுகளை அவர் மேற்கொள்வதால் மேலும் அதிகமாக பலதரப்பினராலும் அவர் விரும்பப்படுகிறார்.
ஓய்வை அறிவித்த தோனி
கடந்த 437 நாட்களாக அவர்கள் சர்வதேச போட்டிகளை விளையாடாமல் உள்ளார். மேலும் கடந்த மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வையும் அறிவித்துள்ளார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக அவர் யூஏஇயில் உள்ளார். நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பல்வேறு வியூகங்களை அமைத்து சிஎஸ்கேவின் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
விமர்சனங்களை உடைத்த தோனி
இதனால் ரசிகர்கள், குறிப்பாக சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் குறைவான பயிற்சி ஆட்டங்களையே எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்ட நிலையில், அதையெல்லாம் உடைத்து, தான் இன்னும் அதே பழைய கெத்துடன் தான் உள்ளதாக தன்னை நிரூபித்துள்ளார் தோனி.
100வது போட்டி வெற்றி பெற்ற தோனி
இந்நிலையில், நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றி மூலம் சிஎஸ்கேவின் கேப்டனாக தன்னுடைய 100வது போட்டி வெற்றியை அவர் உறுதி செய்துள்ளார். இதன்மூலம் இந்த சாதனையை புரிந்துள்ள முதல் ஐபிஎல் கேப்டன் என்ற பெருமையும் தோனிக்கு கிடைத்துள்ளது. இதனால் அவரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.