பஞ்சாப் அணி த்ரில் வெற்றி
ஐபிஎல்லின் 38வது லீக் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 168 ரன்களை இலக்காக வைத்த நிலையில், அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் அதை முறியடித்தது.
மாக்ஸ்வெல் அதிரடி
அந்த அணியின் நிகோலஸ் பூரன் 53 ரன்களை அடித்த நிலையில் கிளென் மாக்ஸ்வெல்லும் 24 பந்துகளில் 32 ரன்களை அடித்தார். மேலும் எதிரணியின் முக்கிய வீரரான ரிஷப் பந்த்தின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 4 ஓவர்களை போட்ட நிலையில் 31 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
மாக்ஸ்வெல் குறித்து ராகுல்
இந்நிலையில் கிளென் மாக்ஸ்வெல் அணியின் மிகச்சிறந்த வீரர் என்று கேப்டன் கேஎல் ராகுல் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பயிற்சி ஆட்டங்களின் போதும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாகவும், அவருக்கு சப்போர்ட்டாக இருந்தால் மட்டுமே போதும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மிடில் ஆர்டரில் அவர் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
5வது இடத்தில் பஞ்சாப் அணி
அடுத்து வரும் போட்டிகளிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுவரை 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.