சென்னை சேப்பாக் சாம்பியன்
அதற்கு சமீபத்திய உதாரணம் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியசாமி. 2019ம் ஆண்டு டிஎன்பிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. பைனில் திண்டுக்கல்லை சாய்த்து, கோப்பையை தட்டிச் சென்றிருக்கிறது சென்னை சேப்பாக் கில்லீஸ்.
பெரியசாமி யார்?
தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம் வீரர் தான் பெரியசாமி. இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றி, ஒட்டு மொத்த தொடர்நாயகன் விருதுக்கும் சொந்தகாரானார் பெரியசாமி. யார் இவர் என்ற ஒரே தொடரில் அனைவரின் புருவங்களையும் உயர்த்தி பார்க்க வைத்து இருக்கிறார்.
கிராமத்து பெரியசாமி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் பெரிய சாமி. தந்தை பெயர் கணேசன், தாயார் பெயர் காந்தாமணி. இவர்களுக்கு 3வது மகன் பெரியசாமி. லாரி டிரைவரான கணேசன் உடல்நிலை காரணமாக, தற்போது வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகிறார்.
கிரிக்கெட்டில் ஆர்வம்
பெரியசாமியின் தாய் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சிறுவயதிலேயே படிப்பில் ஆர்வமில்லாத பெரியசாமி ஆடு மேய்ப்பது முதல் நெசவு, நூல் மில் வரை பல்வேறு வேலைகளை செய்து வந்திருக்கிறார். அவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம்.
பரிசுகளை அள்ளியவர்
அவரின் திறமையையும், ஆர்வத்தையும் கண்ட ஜெயபிரகாஷ் என்ற இளைஞர் பந்து வீச்சு பயிற்சி அளித்துள்ளார். தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல பரிசுகளை அள்ளினார் பெரியசாமி. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் சென்னை சேப்பாக் அணியில் விளையாடும் வாய்ப்பு கிட்டியது.
பாராட்டு, வாழ்த்து
அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு பயன்படுத்திய பெரியசாமி தனது திறமையை தமிழகம் அறிய செய்துள்ளார். பெரியசாமியின் விளையாட்டு திறன் அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் உச்சி முகர வைத்திருக்கிறது. அவரது கிராமத்தில் குடும்பத்தினரும், கிராம இளைஞர்களும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
ஆச்சரியம்
ஆடு மேய்த்த பெரியசாமி கிரிக்கெட் ஆடுகளத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சாதனைக்கு கல்வி ஒரு பொருட்டல்ல, லட்சியம், ஆர்வம் இருந்தால் படைக்கலாம் என்பதை மெய்பித்து இருக்கிறார். அவரின் திறமையை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உரிமையாளர் பா. சிவந்தி ஆதித்தன் ஏற்கனவே கணித்து கூறியிருக்கிறார்.
அன்றே சொன்னார்
ஜூலை 13ம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது நினைவுக்கு வருகிறது. அவர் கூறியதாவது: டிஎன்பிஎல் தொடர் மூலம் இளம் வீரர்களின் திறமை மேம்பட்டு வருகிறது. மலிங்கா போல் பந்து வீசும் வீரரை நாங்கள் எங்கள் அணிக்கு எடுத்துள்ளோம்.
வாய்ப்பை பயன்படுத்தினார்
அவரது பெயர் பெரியசாமி. 2வது டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் அவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பயிற்சியின் போது அவர் பந்து வீசிய விதத்தை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொள்வார் என்று நம்புகிறேன்.
கிராமபுற வீரர்கள்
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் ஜெபசெல்வின், ஆனந்த், சந்தானசேகர் ஆகியோர் கிராம புறத்தை சேர்ந்தவர்கள் தான். எங்கிருந்து வருகிறார்கள் என்பது பிரச்னை இல்லை. கிரிக்கெட் நன்றாக ஆடினால் வாய்ப்பு கிடைக்கும் என்றார். அவர் குறிப்பிட்டதை போன்று பெரியசாமி டிஎன்பிஎல் தொடரில் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.