கொரோனா
சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி, கடந்த 6ம் தேதி நாடு திரும்பியது. தனியார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபளவர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.
உலா வரும் கேள்விகள்
இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து திரும்பிய மொத்த அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே கடந்த ஜூலை 13ம் தேதி தொடங்கவிருந்த தொடர் ஜூலை 18ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சீனியர் வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியிருந்தால், இலங்கையின் 'ஏ' அணியுடன் போட்டியை நடத்தியிருக்கலாமே, திட்டமிட்டபடி போட்டிகள் முடிந்திருக்கும் என்ற கேள்விகள் உலா வருகின்றன.
உண்மையான காரணம்
இந்நிலையில் முற்றிலுமாக தொடரை ஒத்திவைத்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து சென்ற வீரர்களை தவிர்த்து 15 பேர் கொண்ட தனி அணி ஒன்றை இலங்கை வாரியம் உருவாக்கி அவர்களுக்கு கொழும்புவில் பயிற்சி அளித்து வந்தது. ஒருவேளை இலங்கையின் முதல் தர அணி கொரோனா பாதிப்பால் விளையாட முடியாமல் போனால் இந்த அணியை களமிறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த அணியில் சீனியர் வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
யார் அந்த வீரர்
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், பேட்ஸ்மேன் சந்துன் வீரக்கொடிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மைதானத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த 15 பேர் கொண்ட அணி முழுவதும் தற்போது தனியார் ஹோட்டலில் குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே அனைவரும் ஒருவார காலம் தனிமைப்படுத்தப்பட்ட பின்பே போட்டி தொடங்கும் எனத்தெரிகிறது.