மெகா ஏலம்
இந்த மெகா ஏலத்தில் 8 அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்து வருகிறார். அந்த வகையில் சிஎஸ்கே அணியில் என்ன மாற்றங்கள் நடக்கும் என தெரிவித்துள்ளார். அதில் தோனியை எடுப்பது நஷ்டம் எனக்கூறியுள்ளார்.
எம்.எஸ்.தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ், தோனியை தான் முதல் வீரராக தக்க வைத்துக்கொள்ளும். ஆனால் தோனியிடம் அதைப்பற்றி கேட்டால், அவரே ' என்னை ஏன் அணியில் தக்க வைத்தார்கள்' எனக்கேட்பார். ஏனென்றால் தோனி அடுத்த 3 ஆண்டுகளுக்கு எப்படியும் ஐபிஎல்-ல் விளையாடப்போவதில்லை. பின்னர் எதற்காக பல கோடிகளில் செலவு செய்து அவரை தக்கவைக்க வேண்டும். அதற்கு பதிலாக வேறு வீரரை அவர்கள் எடுக்கலாம். ஆனால் சிஎஸ்கே தோனியை தக்கவைக்கும் முடிவை தான் கண்டிப்பாக எடுக்கும் எனக்கூறியுள்ளார்.
சென்னை அணி உறுதி
எம்.எஸ்.தோனி கடந்த கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்தாண்டு தான் அவரின் கடைசி ஐபிஎல்-ஆக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல்-லிலும் தோனி கண்டிப்பாக இருப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த ஒரு சிக்கல்
ஒருவேளை சிஎஸ்கே அணி தோனியை தக்கவைக்க விரும்பினால் அதிலும் ஒரு சிக்கல் காத்துள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல்-ல் 2 புதிய அணிகளை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஒருவேளை அப்படி இணைக்கப்பட்டால் அணிகளுக்கு ஏலத்தின் போது தக்கவைத்துக்கொள்வது மற்றும் RTM முறையின் எண்ணிக்கை குறைக்கப்படும். கடந்த மெகா ஏலத்தின் போது அணிகள் 3 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளவும், 2 வீரர்களை RTM முறையில் வாங்கவும் அனுமதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தாண்டு மொத்தமாகவே 3 பழைய வீரர்களை தான் இந்த முறையால் தக்கவைத்துக்கொள்ள முடியும். இதனால் தோனியை எடுத்துவிட்டால் அணியில் முக்கிய இளம் வீரர்களை தவறவிட வாய்ப்புள்ளது.