ஐபிஎல் தொடர்
இன்னும் சில நாட்களிலேயே லீக் போட்டிகள் முடிவடைகிறது. லீக் சுற்றில் தற்போது சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். அதேபோல ஆர்சிபி அணியும் பிளேஆஃப் சுற்றுக்கு 3ஆவது அணியாகத் தகுதி பெற்றுள்ளது. அதேநேரம் 4ஆம் இடத்திற்காகக் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அக்டோபர் 8ஆம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிகிறது. அதைத் தொடர்ந்து பிளே ஆப் சுற்றுகள் வரும் அக்டோபர் 10ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி வரும் அக்.15ஆம் தேதி நடைபெறுகிறது.
இதைப் பரிசீலனை செய்யலாம்
இந்தச் சூழலில் கிரிக்கெட் அனாலிஸ்ட் ஆகாஷ் சோப்ரா ஐபிஎல் தொடரில் இந்த புதிய முறையைக் கொண்டு வருவது குறித்து பிசிசிஐ பரீசிலனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். அதாவது தற்போது ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் பிளேயிங் 11இல் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் இருக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை 5ஆக உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து பிசிசிஐ விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
4 அணிகள்
ஐபிஎல் தொடரின் தரத்தைக் காக்கவும் ஒரு சில அணிகள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்கவும் இதுபோன்ற நடவடிக்கையை பிசிசிஐ எடுக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஐபிஎல் தொடரில் தற்போது நான்கு அணிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. மீதமுள்ளவை எப்போதும் போராடிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகளைச் சேர்க்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அப்படிப்பட்ட சூழலில் இந்த பிரச்சினை மேலும் பெரிதாகும்.
விதியை மாற்றுங்கள்
இது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும். ஏனென்றால் இந்த சீசனில் பார்த்தால் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகள் மட்டுமே புள்ளிப் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருந்தன. மீதமுள்ள அணிகள் தொடர்ந்து போராடுவதைக் கண்டால், பிரச்சினை எங்கு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அணிகள் வீரர்களை வாங்குவதில் தான் இங்குச் சிக்கல் உள்ளது. இப்போதே 4 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 7 இந்திய வீரர்கள் ஆகியோருடன் விளையாடுவது தரத்தைப் பராமரிக்க உதவாத நிலையில், 10 அணிகள் என்று வரும்போது என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?
அணிகள் விருப்பம்
ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் 5 வெளிநாட்டு வீரர்களை அனுமதிப்பது குறித்து பிசிசிஐ தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு அணியும் 10-11 வெளிநாட்டு வீரர்களை அணியில் வைத்திருக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும். 5 வெளிநாட்டு வீரர்களுடன் விளையாட விரும்புபவர்கள் விளையாடலாம். இல்லை வேண்டாம் என்று நினைப்பவர்கள் 4 வீரர்களுடனேயே தொடர்ந்து விளையாடலாம். இதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
விதிகள் என்ன
தற்போது ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் பிளேயிங் 11இல் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் இருக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மேலும் புதிதாக இரண்டு அணிகள் ஐபிஎல் தொடரில் சேர்க்கப்படும் நிலையில், இந்த விதியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாஷ் சோப்ரா மட்டுமின்றி பல்வேறு கிரிக்கெட் வல்லுநர்களும் இதே கருத்தைத் தான் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.