சுப்மன் கில்லுக்கு ஏமாற்றம்
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகவும் நிலையான ஃபார்ம் கொண்ட வீரராக சுப்மன் கில் இருந்து வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் 4 அரைசதம் மற்றும் ஒரு சதம் என 638 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 70 ரன்கள் ஆகும். நடப்பாண்டில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த 2வது வீரர் அவர் தான் ஆகும். எனினும் அவருக்கு வங்கதேச தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆகாஷ் சோப்ரா விளாசல்
இந்நிலையில் இதற்காக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கொதித்தெழுந்துள்ளார். அதில், சுப்மன் கில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் டி20 உலகக்கோப்பையிலும் விளையாடாததால் புத்துணர்ச்சியுடன் தான் இருக்கிறார். இப்படி இருக்கையில் அவருக்கு ஏன் பணிச்சுமை எனக்கூறி ஓய்வு தர வேண்டும். எனக்கு இது புரியவே இல்லை.
வாய்ப்பே கொடுக்காதீங்க
சுப்மன் கில் எந்த தவறுமே செய்யவில்லையே. அவர் சிறப்பாக விளையாடியும் அணியில் சேர்க்க விருப்பமில்லை என்றால் அவருக்கு இனி வாய்ப்பே தராதீர்கள். ஏனென்றால் அங்கு தான் லாஜிக்கே இல்லை. வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தால் தானே அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என ஆகாஷ் சோப்ரா விளாசியுள்ளார்.
இஷானுக்கு மட்டும் வாய்ப்பு?
வங்கதேச தொடரில் ஏற்கனவே ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் என 4 வீரர்கள் ஓப்பனிங்கிற்கு உள்ளனர். இதனால் சுப்மன் கில் சேர்க்கப்படவில்லை என கூறினாலும், அந்த இடத்தில் இஷான் கிஷான் மட்டும் எப்படி வாய்ப்பு பெற்றார் என்ற கேள்வி உள்ளது. இதனால் பிசிசிஐ மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.