பயிற்சியாளர் போட்டி
இலங்கைக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக 2வது ஒருநாள் போட்டியின் பேட்டிங் வரிசையில் புவனேஷ்வர் குமாருக்கு முன்னதாக தீபக் சஹாரை களமிறக்கி, அணியின் வெற்றிக்குப் பயிற்சியாளர் டிராவிட் முக்கிய வியூகம் அமைத்திருந்தார். இதனால், இந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.
வழுக்கும் கோரிக்கை
இந்திய அணிக்கு தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. அடுத்த முறையும் அவர் தான் பயிற்சியாளராக இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் அவரின் பயிற்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியை எதிர்த்து ராகுல் டிராவிட் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முக்கியத்துவம் இருக்காது
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். அதில், இந்தியாவின் பயிற்சியாளருக்கான போட்டியில் டிராவிட் கலந்துக்கொள்ள விரும்ப மாட்டார் என நினைக்கிறேன். அப்படி அவர் போட்டியிட்டால் ரவி சாஸ்திரி - டிராவிட் இடையே கடும் போட்டி நிலவும். ஆனால் டிராவிட்டிற்கு அணி நிர்வாகம் முக்கியத்துவம் தரும் என கூறமுடியாது. சாஸ்திரியே முதல் தேர்வாக இருப்பார்.
எந்த மாற்றமும் இருக்காது
பயிற்சியாளருக்கான போட்டியில் டிராவிட் ஒருவேளை பங்கேற்கவில்லை என்றால், ரவி சாஸ்திரிதான் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார். அவரை எதிர்த்து டிராவிட்டை தவிர வேறு யார் போட்டியிட்டாலும், வெற்றி பெற மாட்டார்கள். டி20 உலகக் கோப்பை முடிந்தப் பிறகும் பயிற்சியாளர் பதவியில் மாற்றம் இருக்காது எனக்கூறியுள்ளார்.