மேட்ச் பிக்ஸிங் புகார்
கிரிக்கெட் உலகை 90கள் முதல் அச்சுறுத்தி வருகிறது மேட்ச் பிக்ஸிங் புகார்கள். இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணி போன்ற அணிகளை 90களின் இறுதியில் அதிர வைத்தது மேட்ச் பிக்ஸிங் புகார்கள். பல முன்னணி வீரர்கள் மீது அப்போது புகார் கூறப்பட்டது.
ஐபிஎல் சர்ச்சை
அதன் பின் லேசாக இருந்த பிக்ஸிங், ஐபிஎல் போன்ற டி20 தொடர்களின் வரவுக்கு பின் மேட்ச் பிக்ஸிங் அதிகரித்தது. ஐபிஎல் தொடரில் 2013ஆம் ஆண்டு பெரிய அளவில் பிக்ஸிங் சர்ச்சை எழுந்தது. மேலும், 2016, 17 ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடை செய்யப்பட்டன.
பாகிஸ்தான் கிரிக்கெட் சர்ச்சைகள்
அதே போல, கடந்த 20 ஆண்டுகளில் அதிக அளவில் மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கிய அணி என்றால் அது பாகிஸ்தான் அணி தான். பல வீரர்கள் அதனால் தடை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மீண்டும் அணியில் வாய்ப்பு பெற்றதும் உண்டு.
ஆகிப் ஜாவேத் தகவல்
இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் ஜாவேத் மேட்ச் பிக்ஸிங் மாபியா இந்தியாவில் இருக்கிறது என்றும், அவர்களை தடுக்கும் தைரியம் இதுவரை யாருக்கும் வரவில்லை என்றும் கூறி அதிர வைத்து உள்ளார்.
ஐபிஎல் கேள்விகள்
"கடந்த காலத்தில் ஐபிஎல் பற்றி நிறைய கேள்விகள் எழுந்தன. இந்தியாதான் மேட்ச் பிக்ஸிங் மாபியாவின் கூடாரம் என நினைக்கிறேன்" என கூறி உள்ளார் ஆகிப் ஜாவேத். மேட்ச் பிக்ஸிங் புக்கிகள் இந்தியாவில் அதிக அளவில் உள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தைரியம் இல்லை
"ஒருமுறை நீங்கள் மேட்ச் பிக்ஸிங் செய்ய முடிவு செய்தால் அதன் பின் வெளியே வரும் வழியே இல்லை. இந்த மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தைரியம் இதுவரை யாருக்கும் வரவில்லை" எனவும் கூறி இருக்கிறார் ஆகிப் ஜாவேத்.
நான் எதிராக பேசினேன்
"நான் மேட்ச் பிக்ஸிங்கிற்கு எதிராக பேசினேன். அதனால் என் கேரியர் பாதியிலேயே முடிந்து போனது. என்னை துண்டு, துண்டாக வெட்டி விடுவேன் என மிரட்டினார்கள்" எனவும் தனக்கு நேர்ந்த மோசமான நிகழ்வுகளை கூறினார்.
முன்னேற முடியாது
"நீங்கள் மேட்ச் பிக்ஸிங் பற்றி வெளிப்படையாக பேசினால், உங்கள் கேரியரில் உங்களால் குறிப்பிட்ட அளவுக்கு தான் போக முடியும். அதனால் தான் என்னால் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக முடியவில்லை" என பகிரங்க புகாரையும் கூறினார்.
எப்படி நடந்தது?
90களில் எப்படி மேட்ச் பிக்ஸிங் நடந்தது என்பது பற்றியும் கூறினார் அவர். ஒரு போட்டியை பிக்ஸ் செய்ய நான்கு அல்லது ஐந்து வீரர்கள் இருந்தால் போதும். அது அந்தக் காலத்தில் பெரிய காரியம் இல்லை. வெற்றி பெறக் கூடிய அணி கூட சிங்கர் கப் உட்பட பல தொடர்களில் மோசமாக ஆடி உள்ளது.