3 போட்டிகள் அடங்கிய தொடர்
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3 போட்டிகளை கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் ஆடிய இந்திய அணியின் வீரர்கள் குறிப்பாக பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார் அகியோர் அபார திறமையை வெளிப்படுத்தி இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற காரணமாக இருந்தனர்.
முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்ட இந்திய அணி பெற்ற இந்த வெற்றி சாதனையாக மாறியது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி மேற்கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் பெற்ற முதல் வெற்றி இது. முன்னதாக டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இதன்மூலம் தனது முதல் வெற்றியை ஒருநாள் தொடரில் பெற்றிருந்தது.
பந்துவீச்சாளர்களின் வலிமை
இந்த தொடரின் போது எம்எஸ் தோனியும் அணியில் இருந்தார். அவரும் அணியின் வலிமையை கூட்டினார். மேலும் பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சுகள் அபாரமாக இருந்தது. இதனால் எதிரணியினர் மிகவும் கலக்கத்துடனேயே போட்டிகளை எதிர்கொண்டனர்.
பும்ராவை கைகாட்டிய பின்ச்
இந்நிலையில், இந்த தொடர் குறித்து தற்போது தன்னுடைய நினைவலைகளை ஆஸ்திரேலியாவின் குறைந்த ஓவர்கள் போட்டிகளின் கேப்டன் ஆரோன் பின்ச் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த தொடரின்போது பல இரவுகள் தனக்கு தூக்கமில்லாத இரவுகளாக கழிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமாரே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரோன் பின்ச் கலக்கம்
அந்த நாட்களில் தான் திடீர் திடீரென தூக்கத்திலிருந்து முழித்து பும்ரா தன்னை அடுத்த நாள் போட்டியில் வீழ்த்திவிடுவாரோ என்று கலக்கத்துடன் நினைத்து பார்த்ததாகவும், புவனேஸ்வர் குமாரும் இத்தகைய கலக்கத்தை தனக்கு அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டிகளில் தான் தொடர்ந்து ரன்களை குவிக்க முயற்சித்ததாகவும், ஆனால் அதில் தவறியதாகவும் அவர் கூறியுள்ளார்.