வெற்றிக்காக தீவிரம்
ஐபிஎல் 2021 தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன.
அதிக ரன்கள்
டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான் அணியின் 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை அளித்துள்ளார். கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 92 ரன்களை 49 பந்துகளில் குவித்திருந்தார். இதையடுத்து அவர் தற்போது ஆரஞ்ச் கேப் ஓட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். மொத்தத்தில் அவர் 186 ரன்களை எடுத்துள்ளார்.
லஷ்மன் பாராட்டு
இதேபோல ஆர்சிபி அணி வீரர் ஏபி டீ வில்லியர்சும் இந்த ஓட்டத்தில் 5வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த ஐபிஎல் 2021 சீசனில் இவர்கள் இருவரும் தங்களது அணியின் மிகவும் சிறப்பான வீரர்களாக கலக்கி வருவதாக முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் விவிஎஸ் லஷ்மன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஷிகரின் பயமற்ற ஆட்டம்
கடந்த சீசனில் இருந்து இடைப்பட்ட 8 மாதத்தில் ஷிகர் தவானின் டி20 ஆட்டங்களை தான் பார்த்து வருவதாகவும் அது அவரது அன்டர் -19 மற்றும் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய ஆட்டங்களை நினைவு படுத்துவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். பயமற்ற மற்றும் தீவிரமான ஆட்டங்களை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இளம் வீரர்களுக்கு உதாரணம்
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சர்வதேச போட்டிகளை விளையாடி வருவதாகவும் தொடர்ந்து தன்னை மெருகேற்றி இளம் வீரர்களுக்கு மிக சிறந்த உதாரணமாக அவர் விளங்குவதாகவும் லஷ்மன் மேலும் கூறியுள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையில் தன்னுடைய வாய்ப்புகளை அவர் அதிகரித்துள்ளதாகவும் லஷ்மன் குறிப்பிட்டுள்ளார்.
டீ வில்லியர்ஸ் தனித்துவம்
இதேபோல ஆர்சிபி வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தனித்துவமாக விளையாடி வருவதாகவும் ஆண்டுக்கு ஆண்டு அவரது போட்டிகளில் புதுமையை புகுத்தி வருவதாகவும் லஷ்மன் பாராட்டியுள்ளார். சர்வதேச போட்டிகளை விளையாடாவிட்டாலும் அவரது பிட்னஸ், விளையாட்டின் மீதான விருப்பம் உள்ளிட்டவை சிறப்பானவையாக உள்ளதாகவும் லஷ்மன் கூறியுள்ளார்.