ஓய்வு பெறலாமா?
ஏபி டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்க கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது உள்ளூர் டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஒரு பேட்டியில் தோனியின் மோசமான பார்ம் காரணமாக அவர் இப்போது ஓய்வு பெறலாமா? என கேள்வி கேட்கப்பட்டது.
80 வயது தோனி
அதற்கு டி வில்லியர்ஸ், "என்ன விளையாடுகிறீர்களா? தோனி 80 வயதாகி, சக்கர நாற்காலியில் இருந்தாலும் என் அணியில் இருப்பார்" என அதிரடியாக பதில் அளித்தார். தோனி பார்ம் அவுட் ஆனால் கூட சிறந்த வீரர் என்பதில் டி வில்லியர்ஸ் உறுதியாக இருக்கிறார்.
அணியில் இருந்து நீக்கமாட்டேன்
மேலும், "தோனியின் சாதனைகளை பாருங்கள். ஒரு அணியில் இருந்து இப்படி ஒரு வீரரை நீக்குவதை எதிர்பார்க்க முடியுமா? நானாக இருந்தால் அவரை நீக்க மாட்டேன்" என கூறினார். இந்திய அணியில் தோனியை நீக்க வேலைகள் நடந்து வருவதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தான் டி வில்லியர்ஸ் இப்படி கூறியுள்ளார்.
தோனியின் இடம் உறுதியா?
தோனி கடந்த ஒன்பது ஒருநாள் போட்டிகளில் 156 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆசிய கோப்பையில் கூட அவர் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. எனினும் அவரது விக்கெட் கீப்பிங் திறமை மற்றும் அணி வீரர்களுக்கு ஆலோசனை அளிப்பது போன்றவை அவரை அணியின் முக்கிய வீரராக வைத்துள்ளது. தற்போது டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இடம் பெற்ற ரிஷப் பண்ட் ஒருநாள் அணியிலும் இடம் பிடித்துள்ள நிலையில், சிலர் தோனியின் இடம் இனி நிலையில்லை என்றும், உலகக்கோப்பை போட்டிக்கு முன் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் கூறி வருகின்றனர்.
நீக்குவது சுலபமில்லை
இந்நிலையில், டி வில்லியர்ஸ் போன்ற சிறந்த வீரரின் ஆதரவு என்பது தோனியை அணியில் இருந்து நீக்கினால் எந்த அளவிற்கு அணி நிர்வாகம் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு. ஐபிஎல் தொடரில் ஏபி டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்காக கோலி தலைமையின் கீழ் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.