கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல்லின் 31வது போட்டி நேற்றைய தினம் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆர்சிபி 171 ரன்களில் ஆட்டமிழந்தது. சிறிய மைதானமான ஷார்ஜாவில் 200 ரன்களுக்கு மேல் எளிதாக எடுக்க முடியும் என்ற நிலையை கோலி தவறவிட்டார்.
2 ரன்களில் வில்லியர்ஸ் ஆட்டமிழப்பு
ஆர்சிபியின் வாஷிங்டன் சுந்தர், சிவம் தூபே ஆகியோரை முன்னதாக களமிறக்கியது ஆர்சிபி. அவர்கள் எதிர்பார்த்த ரன்களை அளிக்காத நிலையில் வழக்கத்திற்கு மாறாக 6வதாக களமிறக்கப்பட்ட டீ வில்லியர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
இதனால் அந்த அணியின் ரன் ரேட் குறைவாக இருந்தது. இதை எதிரணி சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு ஐபிஎல்லில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. கிறிஸ் கெயில் மற்றும் கேப்டன் கே.எல் ராகுலின் சிறப்பான அதிரடி ஆட்டமும் அந்த அணிக்கு கைகொடுக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கோலி விளக்கம்
இந்நிலையில் எதிரணியின் லெக் ஸ்பின்னர்களை சமாளிக்கவே டீ வில்லியர்சை தாமதமாக களமிறக்கியதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். அணி நிர்வாகத்திடம் பேசியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த முடிவு வருத்தமளிக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கே.எல். ராகுல் பாராட்டு
இதனிடையே, கிறிஸ் கெயில் சிறப்பாக விளையாடியதற்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் பாராட்டு தெரிவித்துள்ளார். பசியுடன் இருக்கும் சிங்கம் போன்றவர் கெயில் என்றும் எப்போது விளையாடினாலும் ஒரே மாதிரியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.