டி20 தொடர்
பாகிஸ்தான் ப்ரீமியர் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கியது. மொத்தமுள்ள 34 போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதல் 20 ஆட்டங்கள் கராச்சியிலும், மீதமுள்ள 10 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 ப்ளே ஆட்டங்களும் லாகூரில் நடத்துவதாக இருந்தது.தொடரின் போது முதன் முதலில் லாகூர் அணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து 5 வீரர்களுக்கும், ஒரு பயிற்சியாளருக்கும் கொரோனா உறுதியானது. இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மீண்டும் பி.எஸ்.எல்
இந்த தொடர் மீண்டும் வரும் ஜூன் 1ம் தேதி முதல் தொடங்க ஜூன் 20ம் தேதி வரை நடைபெறவிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. தொடர் முழுவதும் கராச்சியிலேயே நடத்த திட்டமிட்டது. ஆனால் கொரோனா காரணமாக அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது.
அரபு நாடு
இதனையடுத்து ஐபிஎல்-ஐ போன்று பிஎஸ்எல் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து அதற்கான பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் அதற்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டது. பிஎஸ்எல் தொடரை அபுதாபியில் நடத்திக்கொள்ள அந்த அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் அபுதாபியில் உள்ள சேக் சயாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முக்கிய நிபந்தனைகள்
ஆனால் முக்கிய நிபந்தனைகளும் அபுதாபி அரசால் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி தொடரில் பங்கேற்கவிருக்கும் அனைத்து வீரர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அபுதாபி வரும் வீரர்கள் 10 நாட்கள் கட்டாயமாக குவாரண்டைன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீரர்களுக்கும் தடுப்பூசி சாத்தியமா, டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக தொடரை நடத்திவிட முடியுமா என கேள்விகள் எழுந்துள்ளது.