லண்டன்: ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற அணியில் ஒரு பந்து கூட பவுலிங் போடாமல், ஒரு பந்து கூட பேட்டிங் செய்யாமல், ஒரு கேட்ச் கூட பிடிக்காமல் இருந்த 13வது வீரர் என்ற பெருமையை பெற்றார் இங்கிலாந்தின் ஆதில் ரஷீத்
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வென்றது. முதல் டெஸ்டில் 31 ரன்களில் வென்ற இங்கிலாந்து, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் வென்றது.
இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நடந்த ஒருதினப் போட்டித் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால், ஆதில் ரஷீத் இங்கிலாந்து அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ரஷீத் ஒரு பந்து கூட பவுலிங் செய்யவில்லை. அதேபோல் ஒரு பந்து கூட பேட்டிங் செய்யவில்லை. தவிர, ஒரு கேட்ச் அல்லது ரன் அவுட் கூட செய்யவில்லை.
இவ்வாறு ஒரு டெஸ்ட் போட்டியில் எந்தப் பங்களிப்பும் செய்யாத 13வது வீரரானார். இந்தப் பட்டியில் 12வதாகச் சேர்ந்தவர், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்தமன் சாகா.
ரஷீதுக்கு பவுலிங் மற்றும் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பே இல்லாமல் ஆட்டம் மிகவும் வேகமாக முடிந்து விட்டது.