காபூல்: சர்ச்சையில் சிக்குவது என்பது என்னுடைய பொழுதுபோக்கு என்பது போல, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மொகமது ஷாஷத் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் அனுமதி பெறாமல், பாகிஸ்தானில் நடந்த உள்ளூர் போட்டியில் விளையாடியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, சமீபகாலமாக மிகப் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், பெங்களூரில் ஜூன் 14ம் தேதி இந்தியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உள்ளது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த நான்கு வீரர்கள், தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகின்றனர். கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய ரஷீத் கான், 14 போட்டிகளில் 17 விக்கெட்களை வீழ்த்தினார். மீண்டும் ஐதராபாத் அணிக்காக ரூ.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சின்னமன் சுழற்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் பக்தீன் விளையாடுகிறார். ஆல்ரவுண்டரான முகமது நபியை ஐதராபாத் அணி, ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. 17 வயதாகும் சுழற்பந்து வீச்சாளரான முஜிபுர் ரஹ்மானை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை போட்டிக்கும் ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான முகமது ஷாஷத், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஏற்கனவே போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாக, ஓராண்டு தடை விதிக்கப்பட்டார்.
சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது, அவுட்டானதால் ஆத்திரத்தில், மைதானத்தில் பேட்டால் வேகமாக அடித்து சேதப்படுத்தினார். அதனால், இரண்டு ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஜிம்பாப்வேயில் இருந்து பெரும்பாலான வீரர்கள் ஆப்கானிஸ்தான் திரும்பியுள்ள நிலையில், ஷாஷத், பாகிஸ்தானுக்கு சென்று அங்கு நடக்கும் உள்ளூர் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
ஒரு மாதத்துக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று கூறியுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஷாஷத்துக்கு, ரூ.3 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
அதேபோல், வெளிநாடுகளில், குறிப்பாக பாகிஸ்தானில் தங்கியிருக்கும் அனைத்து வீரர்களும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.