நாக்பூர்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக்கோப்பை டி20 தகுதிச்சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நாக்பூர், தரம்சலாவில் நடைபெற்று வருகிறது.
'ஏ' பிரிவில் வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, ஆங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் முதன்மை சுற்றான 'சூப்பர் 10' ரவுண்டுக்கு தகுதி பெறும்.
'பி' பிரிவில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் தான் மோதிய 2 ஆட்டங்களிளிலும் வெற்றி பெற்றன. ஸ்காட்லாந்து, ஹாங்காங் அணிகள் 2 ஆட்டத்திலும் தோல்வியுற்று வெளியேறின. இந்த பிரிவில் கடைசி 'லீக்' ஆட்டங்கள் இன்று நடந்தன.
இதில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் நாக்பூர் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. ஆப்கன் அணியின் முகமது நபி (52), ஷென்வாரி (43), முகமது ஷாக்சத் (40) ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.
இதையடுத்து 187 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 127 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் ஆப்கான் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கன் சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.