பெல்பாஸ்ட் : ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நேற்று பெல்பாஸ்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 36.1 ஓவர்களில் 124 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ரஷீத் கான் அபாரமாக பந்து வீசி 8 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணி 23.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இஷனுல்லா ஆட்டமிழக்காமல் 57 ரன்களை எடுத்தார்.தொடர் நாயகனாக ரஷீத் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னும் இரன்டு வாரங்களில் ஆசிய கோப்பை போட்டிகள் துவங்க உள்ள நிலையில் ஆப்கானிஸ்தானின் இந்த தொடர் வெற்றி அவர்களுக்கு மனதளவில் பெரும் தைரியத்தை கொடுத்திருக்கும் !