மாபெரும் ஆல் ரவுண்டர்
ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃபுக்கு பிறகு, இங்கிலாந்துக்கு கிடைத்த மாபெரும் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவரது திறமைக்கு பஞ்சமே கிடையாது. ஆனால், அவ்வப்போது வெளிப்படும் இவரது சில தனிப்பட்ட கேரக்டரால் அணிக்கும் சரி, அவருக்கும் சரி சங்கடங்களே மிச்சம். அதில் மிக முக்கியமான சம்பவம் இது.
இரவு முழுவதும் சிறையில்
2017ம் ஆண்டு, இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபாரமாக வென்றது. அந்த போட்டி முடிந்ததும் சக வீரர் அலெக்ஸ் ஹேல்சுடன் இரவு விடுதிக்கு சென்ற இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மதுபானம் அருந்தியதுடன் அங்கிருந்த ஒரு நபருடன் வாக்குவாதம் செய்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் ஸ்டோக்ஸ் தாக்கியதில் அந்த நபர் முகத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரிஸ்டல் கவுண்டி போலீசார், ஸ்டோக்சை கைது செய்தனர். இரவு முழுவதும் அவரை சிறையில் வைத்து விசாரித்து, பின்னர் குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் விடுவித்தனர்.
2012, 2013, 2014ல்
இதைத் தொடர்ந்து, வெஸ்ட் இன்டீஸுடனான அடுத்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஸ்டோக்ஸ் ஏற்கனவே 2012, 2013, 2014ல் இதுபோல் குடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை, ஏழரை
அதேபோல், ஸ்டோக்ஸுக்கு பிறகு அணியில் ஆல் ரவுண்டர்களாக பல பேர் வந்தாலும், ஓலே ராபின்சன் போன்று எவரும் பளிச் பளிச் ஆகவில்லை. கடந்த வாரம் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ராபின்சன், 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 42 ரன்களும் எடுத்து தனது அட்டகாசமான ஆல் ரவுண்டர் எபிலிட்டியை வெளிப்படுத்தி அசத்தினார். ஆனால், நேரம் என்னவோ அவருக்கு சாதகமாக இல்லை. பென் ஸ்டோக்ஸ் கூட கிரிக்கெட் விளையாட வந்த பின் சர்ச்சையில் சிக்கினார். இவரோ, வருவதற்கு முன்பே, சர்ச்சைகளையும், ஏழரைகளையும் சிறப்பாக செய்து முடித்து தான் அணிக்குள்ளேயே வந்திருக்கிறார்.
நமக்கு மட்டும் ஏன்?
இவர் எட்டு வருடங்களுக்கு முன்பு இனவெறி மற்றும் பாலியல் குறித்து பதிவிட்ட டீவீட் இப்போது வைரலாக, அவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். நியூசிலாந்து அணியை தனி ஆளாக கட்டுப்படுத்திய ஓலே ராபின்சனை, அவரது தனிப்பட்ட செயல்பாடுகளால் வேறு வழியின்றி சஸ்பெண்ட் செய்திருக்கிறது இங்கிலாந்து. முத்து முத்தான ஆல் ரவுண்டர் கிடைத்தாலும், அவர்களது ரவுசான கேரக்டர்களால், நமக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்கிறது என்று வெதும்பி போய் நிற்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.