தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் மன்தீப் சிங். அவரது தந்தை கடந்த சனிக்கிழமை மரணமடைந்த நிலையில், சொந்த ஊருக்கு திரும்பாமல் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமையும் அவருக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான போட்டி இருந்தது.
அவுட் ஆகாமல் 66 ரன்கள் குவிப்பு
கடந்த சனிக்கிழமை பஞ்சாப் அணி பெற்ற வெற்றியை மன்தீப் சிங்கின் தந்தைக்கு அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அர்ப்பணித்தார். இதனிடையே நேற்றைய கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியிலும் மன்தீப் சிங் அவுட் ஆகாமல் 66 ரன்களை குவித்தார். இதன்மூலம் அந்த அணி ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தந்தைக்கு அர்ப்பணித்த மன்தீப்
இந்த போட்டியில் மன்தீப் சிங் 49 பந்துகளில் அரைசதத்தை அடித்த நிலையில் வானத்தை பார்த்து தன்னுடைய தந்தைக்கு அந்த அரைசதத்தை அர்ப்பணித்தார். இந்த நிகழ்வின் வீடியோவை ஐபிஎல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
தந்தையின் அறிவுறுத்தல்
இந்நிலையில், 100 ரன்களை அடித்தாலும் 200 ரன்களை அடித்தாலும் அவுட் ஆகாமல் விளையாடும்படி தன்னுடைய தந்தை தனக்கு தொடர்ந்து அறிவுறுத்தியதாக மன்தீப் சிங் தெரிவித்துள்ளார். இதனிடையே, நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய மன்தீப் சிங்கிற்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஷிகர் தவான் பாராட்டு தெரிவித்துள்ளார்.