சுற்றிப் பார்க்க அனுமதி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த பிறகு, இங்கிலாந்து தொடருக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் மீதம் இருந்ததால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு 10 நாட்கள் பிரேக் கொடுக்கப்பட்டது. அதாவது, இந்த 10 நாட்களுக்கு வீரர்கள் பயோ-பபுளில் இருந்து வெளியே சென்றனர். இங்கிலாந்தில் பல இடங்களை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே, குடும்பம் குடும்பமாக இங்கிலாந்து வந்திருந்த இந்திய வீரர்களுக்கு இது அருமையான வாய்ப்பாக அமைந்தது.
நெகட்டிவ் ரிசல்ட்
இதனால், இந்த 10 நாட்களை குடும்பத்துடன் இங்கிலாந்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "இங்கிலாந்தில் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், நல்லவேளையாக இருவருமே இப்போது நலமுடன் உள்ளனர். அதில் ஒருவருக்கு இப்போது நெகட்டிவ் ரிசல்ட் வந்துவிட்டது. மற்றொருவருக்கு மீண்டும் ஜுலை 18ம் தேதி கொரோனா சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், அன்றோடு அவருக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தலும் முடிவடைவதாக" குறிப்பிட்டது.
அணியுடன் இணையவில்லை
ஆனால், இரு வீரர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்படவில்லை. அதில் ஒருவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துவிட்டது. மற்றொருவருக்கு கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்ட சோதனையில் பாசிட்டிவ் வந்ததால், அவர் மட்டும் தொடர்ந்து தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், நெகட்டிவ் ரிசல்ட் வந்த உடன், அந்த வீரர் மீண்டும் அணியுடன் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிக்கப்பட்ட அந்த இந்திய வீரர் ரிஷப் பண்ட் என்று பின்னர் தெரிய வந்தது. அவர் யூரோ கோப்பை கால்பந்து போட்டியை நேரில் சென்று பார்த்து வந்த பிறகு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பண்ட், வரும் 18ம் தேதி டுர்ஹாம் செல்லும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியுடன் பயணிக்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலக்கத்தில் பிசிசிஐ
இந்த சூழலில், இந்திய அணியின் throwdown specialist தயானந்த கராணி என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவருடன் நெருக்கமாக இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் உட்பட மூன்று நிர்வாகிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களும் வரும் 18ம் தேதி இந்திய அணியின் பயோ-பபுளில் இணையமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட்டை தொடர்ந்து, இப்போது மற்றொரு முக்கிய இந்திய அணி நிர்வாகிக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பது பிசிசிஐ-யை கலக்கமடையச் செய்துள்ளது.