காதலர் தினம் முதல் கலக்கல்
ஆஸ்திரேலியாவில் இந்தியா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் ஆடிய இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் முத்தரப்புத் தொடரிலும் ஆடியது. ஆனால் வெல்லவில்லை. ஆனால் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடரில் எடுத்த எடுப்பிலிருந்து அசத்திக் கொண்டிருக்கிறது இந்தியா.
7 போட்டிகளில் வெற்றி
நடப்புச் சாம்பியனான இந்தியா இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக மாறி நிற்கிறது.
கிளார்க் பாராட்டு
இந்த நிலையில் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு டோணியே காரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்.
நான்தான் சொன்னேனே
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி...நான் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன், இந்தியா இந்தத் தொடரில் மிகக் கடுமையான போட்டியைக் கொடுக்கப் போகிறது என்று. அவர்கள் இந்த சூழலில் நீண்ட நாட்களாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதுவே அவர்களது தொடர் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
விக்கெட் எடுக்கத் தெரிந்திருக்கிறது
அவர்களுக்கு விக்கெட் எடுக்கத் தெரிந்து விட்டது. இதற்காக கடுமையாக முயற்சித்திருக்கிறார்கள். நிறைய ரன்கள் குவிக்கிறார்கள். இதை இந்தத் தொடர் முழுவதும் நிரூபித்துள்ளனர்.
டோணியே காரணம்
இந்தியாவின் இந்த புத்தெழுச்சிக்கு கேப்டன் டோணியின் தலைமையே காரணம் என நான் நம்புகிறேன். அவர் தனது அணியை வழி நடத்தும் விதம் சிறப்பாக உள்ளது. டெஸ்ட் தொடரில் வீழ்ந்த போதிலும், முத்தரப்பு தொடரில் சரிவுகளைச் சந்தித்த போதிலும் அதிலிருந்து தனது அணியை அழகாக மீட்டுக் கொண்டு வந்துள்ளார் டோணி.
உச்சகட்ட பார்ம்
தற்போது இந்திய அணி உச்சகட்ட பார்மில் உள்ளது. நாங்களும் அதற்கேற்பத் தயாராகி வருகிறோம். மிகச் சிறந்த அணி ஒன்றுக்கு எதிராக விளையாடுகிறோம் என்பதை உணர்ந்துள்ளோம். அந்த சவாலை சந்திக்கத் தயாராகி வருகிறோம் என்றார் கிளார்க்.