புதிய சர்ச்சை
புதிதாக வந்துள்ள 2 அணிகளும், ஏலத்தில் விடப்படும் வீரர்களில் யாரேனும் 2 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம். அதன்படி லக்னோ அணி கே.எல்.ராகுல், ரஷித் கான் என முக்கிய வீரர்களுக்கு வலைவிரித்து வரும் நிலையில் அகமதாபாத் அணி மட்டும் எந்தவித முயற்சிகளும் எடுக்காததை போன்று தெரிகிறது. இதற்கு காரணம் அந்த அணி மீது எழுந்த முக்கிய குற்றச்சாட்டு தான்.
சட்டவிரோதம்
புதிய அணிகளுக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் வென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ரூ.5,625 கோடி கொடுத்து அந்த நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் சில சட்ட விரோத நிறுவனங்களில் சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பிசிசிஐ-க்கு சிக்கல்
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பிசிசிஐ-க்கு மிகவும் நம்ப தகுந்த தகவல்கள் கிடைத்த காரணத்தால் அந்த அணி ஏலம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ-ம் தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஏனென்றால் இன்று தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
என்ன நடவடிக்கை இருக்கும்
இந்நிலையில் அகமதாபாத் அணியின் விவகாரத்தை விசாரிக்க ஐபிஎல் நிர்வாகத்தின் சார்பில் ஒரு குழு அமைக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த பிரச்னையில் விரைந்து விசாரணை நடத்தி அந்த குழு சமர்பிக்கும் அறிக்கையின் படியே அகமதாபாத் அணியை சிவிசி நிறுவனம் வைத்திருக்குமா என்பது முடிவாகும். இல்லையென்றால் வேறு நிறுவனத்திற்கு மாற்றப்படும். இந்தாண்டு ஐபிஎல்-ல் பங்கேற்க முடியாத சூழலே கூட ஏற்படலாம்.