சிறந்த டெக்னிக்
அஜின்க்யா ரஹானே, கோலிக்கு அடுத்த சிறந்த இந்திய பேட்ஸ்மேன் என கருதப்பட்டவர். விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக உருமாறிய அதே வேளையில் இந்திய அணியில் நம்பிக்கை அளித்து வந்த வீரர் ரஹானே. சிறந்த டெக்னிக் கொண்டு வெளிநாட்டுப் தொடர்களிலும் ரன் குவித்து வந்தார் அவர்.
மிடில் ஆர்டர்
டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவர், ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் சீராக வளர்ந்து வந்தார். 90 ஒருநாள் போட்டிகளில் 2962 ரன்கள் குவித்துள்ள அவரது பேட்டிங் சராசரி 35.26 மட்டுமே.
சராசரி
அவர் இந்திய அணியில் நான்காம் வரிசையில் 27 போட்டிகளில் ஆடி உள்ளார். அதில் 843 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 36.65 ஆகும். மிடில் ஆர்டரை விட துவக்க வீரராக ரஹானே மிக சிறப்பாக ஆடி உள்ளார். 54 போட்டிகளில் 1937 ரன்கள் எடுத்துள்ளார். அதில் மூன்று சதமும் அடங்கும்.
சிறப்பான ஆட்டம்
2017ஆம் ஆண்டு ரஹானே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடர்ந்து நான்கு போட்டிகளில் அரைசதம் அடித்தார். அதை அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 79 ரன்கள் குவித்தார்.
நீக்கம்
அதன் பின் மூன்று போட்டிகளில் மோசமாக ஆடினார். அத்துடன் அவர் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்பு அவருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ரஹானேவை டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆகவே பார்த்து வருகிறது இந்திய அணி நிர்வாகம்.
ஏன் இடம் இல்லை?
இது குறித்து விமர்சித்த ஆகாஷ் சோப்ரா, ரஹானே நான்காவது பேட்ஸ்மேன் ஆக களமிறங்கி சிறப்பாக ஆடி இருக்கிறார். அந்த இடத்தில் பேட்டிங் இறங்கி நன்றாக ஆடி, ஸ்ட்ரைக் ரேட்டும் 94ஐ ஒட்டி இருக்கும் நிலையில் அவருக்கு ஏன் அதிக வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பினார்.
பூச்சி போல..
அவரை திடீரென நீக்கி விட்டார்கள். பாலில் விழுந்த பூச்சியை தூக்கிப் போடுவது போல எறிந்து விட்டார்கள். ஏன் அப்படி ஒரு விஷயத்தை செய்ய வேண்டும்? அது மிகவும் மோசமானது என நான் நினைக்கிறேன் என கடுமையாக விமர்சித்தார் ஆகாஷ் சோப்ரா.
தவறு
என் கருத்துப்படி அவர் நன்றாகவே ஆடி வந்தார். அப்போது அவரை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியது தவறு. நன்றாக ஆடிய ஒருவரை நாம் ஆடவைக்கவில்லை என்றால் நாம் தவறான ஒன்றை செய்கிறோம் என அர்த்தம் என்றார் ஆகாஷ் சோப்ரா.
மீண்டும் வாய்ப்பு
அவரது கடைசி தொடரான தென்னாப்பிரிக்க தொடரில் கூட அவர் சிறப்பாகவே ஆடினார். அது எனக்கு நினைவில் உள்ளது. 2018இல் அந்த தொடர் நடந்தது. அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முடித்தார் ஆகாஷ் சோப்ரா.