இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை துவங்கி 3வது நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது. இதில் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 195 ரன்களுக்கு சுருண்ட நிலையில் அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 326 ரன்களை அடித்து முன்னிலை வகித்தது.
133 ரன்களை அடித்த ஆஸ்திரேலியா
இதையடுத்து ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கி ஆடி இன்றைய 3வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை அடித்துள்ளது. இன்றைய 3வது நாள் ஆட்டத்தை இந்தியா துவக்கி ஆடிய நிலையில் அஜிங்க்யா ரஹானே மற்றும் ஜடேஜா ஆடினர்.
ஃபீல் ஆன ஜடேஜா
இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் 49 ரன்களை அடித்திருந்த ஜடேஜா, ஷார்ட் கவரில் ஒரு பந்தை தட்டிவிட்டு சிங்கிள் அடிக்க ரஹானேவை அழைத்த நிலையில் ரஹானே 112 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து ஜடேஜா மிகவும் மோசமாக ஃபீல் ஆனார்.
குவியும் பாராட்டுக்கள்
ஆனாலும் ஜடேஜாவின் இந்த செயலால் ஆத்திரமடையாமல் பெவிலியனுக்கு செல்வதற்கு முன்பாக ஜடேஜாவை தட்டிக் கொடுத்தார் ரஹானா. அவரது இந்த செயல் டிவிட்டரில் அனைவரின் பாராட்டுகளுக்கும் உள்ளானது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடியும் ரஹானேவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
வித்தியாச அணுகுமுறை
இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான முதல் பகலிரவு போட்டியின்போது கேப்டன் விராட் கோலி 74 ரன்களை அடித்திருந்த நிலையில், அவரது ரன் அவுட்டிற்கு ரஹானே காரணமாக இருந்தார். அப்போது மைதானத்திலேயே கோலியின் முகம் மாறியது. தற்போது இதே சூழலில் ரஹானேவின் செயல்பாடு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.