திடீர் ரத்து
பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அந்தவகையில் நியூசிலாந்து அணி 2002ம் ஆண்டுக்கு பிறகு (18 வருடங்களுக்கு பிறகு) சமீபத்தில் தான் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த அணியின் வீரர்கள் பாகிஸ்தானில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி பெற்று வந்தனர். இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த செப்.17ம் தேதி மதியம் 3 மணிக்கு தொடங்கவிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கான கடைசி நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து அணி திடீரென அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரும் அதிருப்தி
பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை, என்றும் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் கூறுவது தவறுதான், ஆனால் வீரர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்புக் கோரியது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகமும், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய சுற்றுப்பயண திட்டத்தை ரத்து செய்து மன்னிப்பு கோரியது. பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில், மற்ற அணிகளின் இந்த செயல்பாடுகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அன்றாட வாழ்க்கை
இந்நிலையில், பாகிஸ்தான் லெஜண்ட் வாசிம் அக்ரம் இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார், அதில், "நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களை ரத்து செய்தபோது நீங்கள் அனைவரும் மிகவும் ஏமாற்றமடைந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். குறிப்பாக நியூசிலாந்து, கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தது. நானும் உங்களைப் போலவே ஏமாற்றமடைந்தேன். உங்களைப் போலவே வேதனையடைந்தேன். உங்களைப் போலவே சோகமாக இருக்கிறேன். ஆனால் நமது அன்றாட வாழ்க்கை தொடர வேண்டும்.
டி20 வேர்ல்டு கப் முக்கியம்
இந்த நிலையில், நாம் செய்ய வேண்டியது பாகிஸ்தான் அணிக்கு நமது ஆதரவை தெரிவிக்க வேண்டும். டி20 உலகக் கோப்பையில் நமது அணியை நாம் ஆதரிக்க வேண்டும். நம் நாட்டுக்கு வந்து விளையாட விருப்பம் இல்லையெனில், எந்த அணியும் இங்கு வரத் தேவையில்லை. அவர்கள் வர வேண்டாம். ஆனால் உலகக் கோப்பையில் நமது அணி சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தினால், உலகெங்கிலும் உள்ள அணிகள் பாகிஸ்தானின் பின்னால் ஓடி வரும். இது உறுதி. ஆல் தி பெஸ்ட், பாகிஸ்தான். நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் இருக்கிறோம்" என்று நெகிழ்ச்சியோடு சற்று சர்ச்சையாகவும் பேசியிருக்கிறார்.