தடுமாறும் கோலி
இந்த சூழலில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் சில முக்கிய வீரர்களின் தலையெழுத்தை தீர்மானிக்க உள்ளதாக தெரிகிறது. அதில், முதலாமானவர் கேப்டன் விராட் கோலி. ஒரு பேட்ஸ்மேனாக இவரிடம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ஒரு டெஸ்ட் கேப்டனாக கடந்த 7 மாதங்களாக சொல்லிக் கொள்ளும்படியான செயல்பாடு கோலியிடம் இல்லை என்ற குற்றச்சாட்டு ஆங்காங்கே அரசல் புரசலாக வெளியானதை கேட்க முடிந்தது.
ரஹானே கேப்டன்சி
2020 டிசம்பரில் தொடங்கி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மெகா தோல்வி அடைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அடித்த ஸ்கோர் வெறும் 36. ஆஸ்திரேலியா கூட, இந்தியா இவ்வளவு மோசமாக சரண்டர் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. அதோடு, அவர் சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பிவிட்டார். அதன் பிறகு, ரஹானே தலைமையிலான இந்திய அணி, மாற்று வீரர்களை கையில் வைத்துக் கொண்டு 2 - 1 என்று கோப்பையை கைப்பற்றி யாரும் நம்ப முடியாத சாதனையை படைத்தது.
WTC Final
அடுத்ததாக இங்கிலாந்து தொடர்.. இது இந்தியாவில் நடந்த சீரிஸ். அதே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர். இந்திய பிட்ச், இந்திய வெப்பநிலை, சுழலும் டிராக்ஸ்.. என இந்தியா பெறப்போகும் வெற்றிக்கு காரணங்கள் அடுக்கப்பட்டன. ஆனால், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா தோல்வி அடைந்தது. அப்போட்டிக்கு கேப்டன் விராட் கோலி. இதை இந்திய ரசிகர்களும் சரி.. அணி நிர்வாகமும் சரி நம்பவில்லை. அதன் பிறகு, அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கொடூர ஸ்பின் பிட்சில் இங்கிலாந்து சரண்டராக இந்தியா 3 - 1 என்று தொடரை வென்றது. முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதால், இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், இந்தியா 3 - 1 என்று வெல்ல WTC பைனல் சாத்தியமானது.
கிரண் மோரே
இந்த நிலையில் தான் இப்போது இங்கிலாந்து சென்றிருக்கிறது இந்திய அணி. ஒருவேளை இந்திய அணி இத்தொடரில் மோசமாக தோற்கும் பட்சத்தில், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் இடத்திற்கு செக் வைக்கப்படலாம். இதுகுறித்த அப்டேட் தான் மும்பையில் இருந்து சவுத்தாம்ப்டனில் தங்கியிருக்கும் இந்திய அணி நிர்வாகத்துக்கு நேற்றிரவு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல.. இந்திய முன்னாள் வீரர் கிரண் மோரே சமீபத்தில் அளித்த பேட்டியில், 'விரைவில் விராட் கோலி, தனது கேப்டன்சியை ரோஹித்திடம் அவரே வழங்குவார். இங்கிலாந்து தொடருக்கு பல விஷயங்களை நாம் காண நேரிடும்" என்று கூறியிருந்ததை நாம் நினைவுப்படுத்தி பார்க்க வேண்டியுள்ளது.
இடத்துக்கு ஆபத்து?
அதுமட்டுமின்றி, இந்த வார்னிங் லிஸ்டில் இருக்கும் மற்றொரு வீரர் ரோஹித் ஷர்மா. டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனராக தனது பணியை இப்போது அவர் லைட்டாக செய்யத் தொடங்கியிருப்பது போல் தெரிகிறது. நிதானமான ஷாட்ஸ்களை தேர்வு செய்கிறார். மோசமான பந்துகளை க்ளீயர் செய்கிறார். கியரை பொறுமையாக மாற்றுகிறார். விராட் கோலி இவர் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால், இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், ரோஹித் ஒருவேளை சொதப்பினால், அவரது இடத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்ற தகவல் மேலோட்டமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.