பாகிஸ்தான் சூப்பர் லீக்
பாகிஸ்தான் சூப்பர் லீக் எனும் டி20 தொடர் ஐபிஎல் தொடரை போலவே கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. `இதுவரை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் அந்த தொடரில் ஆட மறுத்து வந்தனர்.
பாகிஸ்தான் மண்ணில்..
அதனால், கடந்த ஆண்டுகளில் அந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடந்து வந்தது. ஆனால், 2020ஆம் ஆண்டு முழு தொடரும் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது. அனைத்து வெளிநாட்டு வீரர்களும் அந்த தொடரில் பங்கேற்றனர்.
கொரோனா அச்சம்
சிறப்பாக ரசிகர்கள் நிறைந்த மைதானத்தில் நடந்து வந்த அந்த தொடர் மார்ச் இரண்டாம் வாரத்தில் இருந்து கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளானது. இருந்தாலும் அசராமல் ரசிகர்கள் கூட்டத்தோடு போட்டிகள் நடந்தன. இது சில நாடுகளின் வீரர்களுக்கு பீதியை கிளப்பியது.
இங்கிலாந்து வீரர்கள் கிளம்பினர்
இங்கிலாந்து நாட்டு வீரர்கள் பலர் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு, பாகிஸ்தானை விட்டு சென்றால் போதும் என பாதி லீக் சுற்றில் கிளம்பினார்கள். அவர்களில் ஒருவர் தான் அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். அவர் இங்கிலாந்து சென்ற உடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் நிர்வாகத்திற்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
அந்த மெசேஜ்
அதில் தனக்கு இருமல், சளி, தொண்டை வறட்சி உள்ளிட்ட கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதை படித்த கணத்தில் அதிர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு உடனடியாக தொடரின் அரையிறுதி, இறுதிப் போட்டிகளை ரத்து செய்தது.
தெறித்து ஓடிய வீரர்கள்
மற்ற வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானை விட்டு கிளம்பினால் போதும் என அன்று இரவே அரக்கபரக்க தங்கள் நாடுகளுக்கு பறந்தனர். இந்த நிலையில், இந்த தொடரில் அலெக்ஸ் ஹேல்ஸ் உடன் பங்கேற்ற வீரர்கள், எதிரணி வீரர்கள், போட்டி ஒளிபரப்பு குழு, மற்றும் பணியாளர்கள் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த அச்சத்தில் ஆழ்ந்தனர்.
128 பேருக்கு பரிசோதனை
சுமார் 128 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தை விட்டு பிரித்து வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு இல்லை
அதில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி ஆகி உள்ளது. அதே போல, அலெக்ஸ் ஹேல்ஸ்-க்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது. எனினும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
சொல்ல சொல்ல கேட்காமல்..
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை தள்ளி வைக்க வேண்டும் என்று முன்பே கூறப்பட்டது. அப்போது அவர்கள் கேட்கவில்லை. மாறாக மார்ச் 22 அன்று முடிய வேண்டிய தொடரை மார்ச் 18 அன்று முடியும் வகையில் மாற்றி அமைத்தனர்.
எச்சரிக்கை
ஆனால், நிலைமை மோசமானதால் தொடரையும் நடத்த முடியாமல், வெளிநாட்டு வீரர்களுக்கு கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. இந்த சம்பவம் மற்ற கிரிக்கெட் அமைப்புகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.