கைக்கொடுத்த பிசிசிஐ
இதைத்தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்த வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் பத்திரமாக அனுப்பி வைத்தது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேச வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர். எனினும், இந்தியாவில் இருந்து பயணிகள் எவரும் ஆஸ்திரேலியாவில் நுழைய மே 15-ம்தேதி வரை தடை அந்நாடு தடை விதித்திருந்தது. இதனால் ஐபிஎல்லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என மொத்தம் 38 பேரை இந்திய கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது. மாலத்தீவில் அவர்கள் தனிமையில் இருந்த பிறகு தங்கள் நாட்டுக்கு திரும்ப முடிவு செய்திருந்தனர்.
பாதுகாத்த பிசிசிஐ
அதன்படி, இன்று (மே.17) வார்னர், ஸ்மித் உள்ளிட்ட வீரர்களும், நிர்வாகிகள், வர்ணனையாளர்கள் என 38 பேரும் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். குறிப்பாக, வேறு எந்தவித பிரச்சனையும், சிக்கலும் இன்றி அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த பாதுகாப்பான பயணத்துக்கு மிக முக்கிய காரணமாக இருந்து செயல்பட்டது இந்திய கிரிக்கெட் வாரியம் என்றால் மிகையாகாது.
தடை போட்ட அரசு
ஆம்! பயோ-பபுள் பாதுகாப்பையும் மீறி, கொரோனா தொற்று வீரர்களுக்கு பரவத் தொடங்கியதில் வெளிநாட்டு வீரர்கள் அரண்டு போனார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியர்கள். ஏனெனில், நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட இதர வெளிநாட்டு வீரர்களை, அந்தந்த நாடுகளின் அரசுகள், மீண்டும் அழைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டன. ஆனால், ஆஸ்திரேலிய அரசோ, இந்திய நாட்டில் வரும் எவருக்கும் மே-15 வரை ஆஸ்திரேலியாவில் நுழைய அனுமதியில்லை என்று தடை விதித்துவிட்டது. அது, ஆஸ்திரேலிய குடிமகனாக இருந்தாலும், நுழைய அனுமதி இல்லை என்று கைவிரிக்க, என்ன செய்வதென்று தத்தளித்தனர்.
கடும் நடவடிக்கை
ஆனால், வீரர்களுக்கு பக்கபலமாக இருந்த பிசிசிஐ, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு என தனியாக விமானம் ஏற்பாடு செய்து, அவர்களை மாலத்தீவில் பத்திரமாக தங்க வைத்தது. அதுமட்டுமின்றி, வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் பிசிசிஐ செய்து கொடுத்து, அவரது பாதுகாப்பை உறுதி செய்தது. ஏற்கனவே பயோ-பபுளில் கொரோனா நுழைந்துவிட்டதால், வீரர்கள் ஆஸி., செல்லும் வரை வேறு எந்த வீரருக்கும் கொரோனா ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாகவும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிட்னி சென்றடைந்துள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அவரவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.