இந்திய அணி தோல்வி
நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. ரோஹித் ஷர்மா (0), ராகுல் 3 (3), சூர்யகுமார் போன்றவர்கள் ஏமாற்ற, கேப்டன் விராட் கோலி 57 (49), ரிஷப் பண்ட் 39 (30) சேர்த்து அணியை மீட்டனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்து அசத்தியது.
ஹர்திக்
இந்த போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும், ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த 2 வருடங்களாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பி வந்த போதும் அவருக்கு நம்பி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதுவும் நேற்றைய போட்டியில் முழு நேர பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். ஆனால் பவர் ப்ளே ஓவர்களில் திணறிய அவர், 8 பந்துகளில் 2 பவுண்டரி உட்பட 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பலத்த காயம்
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா அவுட் ஆவதற்கு முன் பவுன்சர் பந்து மூலம் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் களத்திலேயே அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். மேலும் ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என்றும் பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமை என்ன?
ஹர்திக்கின் நிலைமையை பார்க்கும் போது அடுத்த போட்டியில் இருந்து அவர் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை கொண்டு வரவேண்டும் என நீண்ட நாட்களாக ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கோரி வந்தனர். தற்போது இந்திய அணியின் நிலைமையும் அதுவாகதான் இருக்கும் எனத்தெரிகிறது.