54 ரன்களை விளாசிய சிவம் தூபே
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான சர்வதேச டி20யின் இரண்டாவது போட்டியில் 3வதாக களமிறக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் சிவம் தூபே 54 ரன்களை விளாசினார்.
விராட் கோலி பேச்சு
சர்வதேச டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அவர்களின் திறமை சோதிக்கப்படுவதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் இளம் வீரர் சிவம் தூபே இடம்பெற்றுள்ளார்.
விளாசிய ஆல்-ரவுண்டர் தூபே
திருவனந்தபுரத்தில் ரசிகர்களின் ஏகோபித்த கோஷங்களுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிவம் தூபே தன்னுடைய முதல் அரை சதத்தை விளாசியதன்மூலம் அணியின் ஸ்கோரை ஏற்றுவதற்கு காரணமாக இருந்தார்.
சிவம் தூபே பேச்சு
தான் இந்திய அணிக்காக அடித்த இந்த முதல் அரைசதம் சிறப்பானது என்று தெரிவித்த சிவம் தூபே ஆனால் இது தனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
போட்டியில் தோல்வியால் மகிழ்ச்சியில்லை
தன்னை பொறுத்தவரை வெற்றி பெறுவதே மிகவும் முக்கியமானது என்று தெரிவித்த சிவம் தூபே, மேற்கிந்திய அணிக்கு எதிரான இந்த இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளதால் மகிழ்ச்சி அடையவில்லை என்று தெரிவித்தார்.
தோல்விக்கு காரணம் கூறும் தூபே
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி சில கேட்சுகளை தவறவிட்டதே தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் தூபே தெரிவித்தார். அந்த கேட்சுகள் பிடிக்கப்பட்டிருந்தால் போட்டியின் போக்கே மாறியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
"விட்டதை அடுத்த போட்டியில் பிடிப்போம்"
இந்திய அணி மிகவும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்த தூபே, இந்த போட்டியில் தவறவிட்ட வெற்றியை அடுத்த போட்டியில் பெறுவோம் என்றும் குறிப்பிட்டார்.
மும்பையில் 3வது போட்டி
ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றநிலையில், நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்று தொடரை சமன் செய்துள்ளது. இந்நிலையில் வரும் 11ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள 3வது டி20 போட்டி இந்த தொடரின் வெற்றியை முடிவு செய்யும்.