மெகா ஏலம்
2 நாட்களுக்கு பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி நடைபெறும் நகரம் எதுவென்று இன்னும் பிசிசிஐயால் இறுதி செய்யப்படவில்லை. முன்னதாக பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அங்கு அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பிசிசிஐ தயக்கம் காட்டுகிறது. நாளொன்றுக்கு சுமார் 20,000 கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் அணிகளின் குற்றச்சாட்டு
இதுகுறித்து பேசியுள்ள முன்னணி ஐபிஎல் அணியின் அதிகாரி, 2 வாரங்களே உள்ளது, ஆனால் இன்னும் எங்களுக்கு மெகா ஏலம் எங்கு நடைபெறுகிறது எனத்தெரியவில்லை. 10 நாட்களுக்கு முன்பு ஒரு இடம் கூறினர். தற்போது மறுக்கின்றனர். இதனால் பயண ஏற்பாடுகளை செய்ய குழப்பத்தில் ஆழ்ந்துள்ளோம். இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் எனக்கூறியுள்ளார்.
பிசிசிஐ கொடுத்த பதில்
இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ அதிகாரி, சில விஷயங்கள் எங்களின் கைகளை மீறி சென்றுவிட்டன. பொறுமை காத்தே தீர வேண்டும். ஹோட்டல்களை புக் செய்வது, ஏற்பாடுகள் செய்வதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது. கொரோனா பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஒருவேளை வேறு இடத்திற்கு மாற்றினால் குறுகிய காலத்திற்கு முன்னதாக தான் அறிவிப்போம் எனக்கூறியுள்ளார்.
Recommended Video
ஐபிஎல் மாற்றம்
மெகா ஏலத்தை போன்று, ஐபிஎல் போட்டிகளையே எங்கு நடத்துவது என புரியாமல் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது. இந்த முறை இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால், தென்னாப்பிரிக்காவுக்கு போட்டிகள் மாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.