3வது டெஸ்ட் 7ம் தேதி துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் வரும் வியாழக்கிழமை சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சிட்னிக்கு இன்று தங்களது பயணத்தை துவங்கியுள்ளன. முன்னதாக இந்திய அணியினருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மீறியதாக குற்றச்சாட்டு
முன்னதாக புத்தாண்டின்போது ரோகித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப் பந்த், சுப்மன் கில் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனா விதிமுறைகளை மீறி உணவகம் ஒன்றிற்கு சென்று ரசிகர் ஒருவருடன் செல்பி எடுத்த விவகாரம் கடுமையான நெருக்கடியை இந்திய அணியினருக்கு கொடுத்துள்ளது.
நெகட்டிவ் ரிசல்ட்
இந்நிலையில் மெல்போர்னில் இந்த ஐந்து வீரர்கள் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த ரிசல்ட் பிசிசிஐக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிக்கு இந்திய அணி தீவிரம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. இதை தொடர்ந்து சிட்னியில் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இதை 2க்கு 1 என்ற கணக்காக மாற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.