இரண்டாவது இடத்தில் டெல்லி அணி
ஐபிஎல்லின் இந்த சீசனில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. தொடர்ந்து முதல் 3 இடங்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபியுடன் போட்டியிட்டு வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
ஐதராபாத் அணியுடன் மோதல்
ஆயினும் கடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான இரு போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது. இதனிடையே, நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மோதவுள்ளது.
காகிசோ ரபடா அறிவுறுத்தல்
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர பௌலர் காகிசோ ரபடா, அணியின் பலத்தை மீண்டும் கொண்டுவர பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சில விஷயங்களில் சிறப்பாக செயல்படுவதன்மூலம் இந்த முக்கிய நேரத்தில் வெற்றிகளை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மீண்டும் பலத்தை கொண்டுவர வேண்டும்
தரமான கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருவதாக தெரிவித்துள்ள ரபடா, ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் தற்போது சிறிது சறுக்கியுள்ளதாகவும் தொடர்ந்து சிறப்பான அணிகளுடன் விளையாடி வருவதாகவும் கூறியுள்ளார். அதனால் எந்த அணி வேண்டுமானாலும் ஜெயிக்க வாய்ப்புள்ளதாகவும் நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்முடைய பலத்தை மீண்டும் கொண்டுவருவதது தான் என்றும் அவர் மேலும் கூறினார்.
மீண்டும் தக்க வைக்கவேண்டும்
ரிக்கி பாண்டிங் அணி வீரர்களை சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும், தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடுகள் சிறப்பான வகையில் கண்காணிக்கப்படுவதாகவும் ரபடா மேலும் கூறினார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் எந்த இடத்தில் வெற்றியை கைநழுவ விட்டோமோ அதை மீண்டும் தக்க வைப்பது ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார்.