குவிந்த வாழ்த்துக்கள்
நேற்று தன்னுடைய 39வது பிறந்ததினத்தை ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ளார் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. அவருக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். ரசிகர்களும் கடந்த சில தினங்களாகவே அவரது பிறந்ததினத்தையொட்டி சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்தனர்.
டாப் ஆர்டரில் விளையாடுவதை விரும்புவேன்
இந்நிலையில் பிசிசிஐ டிவிட்டர் பக்கத்தில் மயங்க் அகர்வால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, தோனி கேம் பினிஷர் மட்டுமல்ல. உலகளவில் சிறந்த பேட்ஸ்மேனும் கூட என்று தெரிவித்துள்ளார். அவர் ஆட்டத்தை சிறப்பாக முடித்து கொடுப்பது குறித்து மட்டுமே அனைவரும் சிலாகித்து பேசுகின்றனர். ஆனால் அவர் சிறப்பாக ஆடக்கூடியவர் என்பதால் அவர் டாப் ஆர்டரில் விளையாடுவதையே நான் விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்
கடந்த 2004 டிசம்பர் 23ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கி விளையாடிய எம்எஸ் தோனி 148 ரன்களை குவித்தார். இதை சுட்டிக்காட்டிய கங்குலி, ஒருநாள் போட்டிகளில் நெருக்கடி நேரத்திலும் சிறப்பான வீரர்கள் தங்களை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். அதற்கு சிறந்த உதாரணம் தோனிதான். அதனால் தான் அவர் ஸ்பெஷல் என்றுள்ளார்.
மகிழ்ச்சியான விஷயம்
அணியில் எம்எஸ் தோனியை தான் தான் தேர்ந்தெடுத்தேன் என்று பெருமையுடன் கூறியுள்ள கங்குலி, ஆனால் ஒரு கேப்டனாக அது தன்னுடைய வேலைதான் என்று தெரிவித்துள்ளார். ஒருவர் மீது நம்பிக்கை வைத்து அவரை தேர்ந்தெடுக்கும்போது, அதற்கு சாதகமாக அவர் நடந்து கொள்வது பெருமை அளிக்கும் விஷயம் என்று தெரிவித்த கங்குலி, இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் கூறியுள்ளார்.